கொடைக்கானலில் கவர்னரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பரபரப்பு போஸ்டர்
- கவர்னர் கொடைக்கானல் வருகையை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- தமிழ்த்தாய் வாழ்த்தின் அந்த வரிகள் பிரபலமடைந்து வருகிறது.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழக கவர்னர் ரவி வருகை புரிந்தார். இன்று கொடைக்கானலில் உள்ள சங்கரா வித்யாலயா பள்ளியில் மாணவர்களை சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
கவர்னர் கொடைக்கானல் வருகையை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் டி.டி. தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற இந்தி வார விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வரி விடப்பட்டு இருந்ததை பல்வேறு கட்சியினர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வந்தனர்.
இதனால் தமிழ்த்தாய் வாழ்த்தின் அந்த வரிகள் பிரபலமடைந்து வருகிறது. இன்று கொடைக்கானல் வந்த கவர்னர் ரவியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் தங்கி இருந்த ஓட்டல் முன்புறம் மற்றும் அவர் பங்கேற்க சென்ற வழிகளில் திராவிடர் தமிழர் மன்றம் சார்பில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வாசகங்கள் இடம் பெற்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒட்டப்பட்டன. நேற்று இரவு வரை இந்த போஸ்டர்கள் தெரியாத நிலையில் இன்று காலை பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டதால் அதனை போலீசார் கிழித்து அப்புறப்படுத்தினர்.