உலகம் (World)

பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் பாய்ந்து 28 பேர் உயிரிழப்பு

Published On 2024-05-30 03:42 GMT   |   Update On 2024-05-30 03:42 GMT
  • கரடுமுரடான மலைகள் அதிகளவு கொண்ட இந்த பகுதி போக்குவரத்துக்கு தகுதியற்றதாக விளங்கி வருகிறது.
  • சாலை தடுப்பில் அந்த பஸ் நேருக்கு நேர் மோதி சுமார் 50 அடி பள்ளத்தாக்கில் பாய்ந்தது.

கராச்சி:

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமாக பலூசிஸ்தான் விளங்குகிறது. நாட்டின் மிகப்பெரிய மாகாணமாக விளங்கும் பலூசிஸ்தான் பொதுவாக வறண்ட மாகாணமாக கருதப்படுகிறது. கரடுமுரடான மலைகள் அதிகளவு கொண்ட இந்த பகுதி போக்குவரத்துக்கு தகுதியற்றதாக விளங்கி வருகிறது. இருந்தாலும் உள்ளூர் பொதுமக்கள் பெரிய நகரங்களுக்கு சென்று வருவதற்காக மலைகளை குடைந்து சாலைகளை ஏற்படுத்தி உள்ளனர். இருப்பினும் சரியான அளவில் இந்த சாலைகளை அமைக்கப்படாததால் விபத்து அபாயம் அதிகம் கொண்ட பகுதிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இந்தநிலையில் பலூசிஸ்தானின் ஒதுக்குபுறமான சிற்றூரான டர்பட்டிலிருந்து இருந்து தலைநகரான குவெட்டாவுக்கு பஸ் ஒன்று இயக்கப்படுகிறது. தினசரி சேவைக்காக ஒருதடவை மட்டுமே இயக்கப்படும் இந்த பஸ்சில் எப்போதும் கூட்டம் அலைமோதும். இதனையடுத்து நேற்று இயக்கப்பட்ட அந்த பஸ்சில் சுமார் 54 பயணிகள் பயணித்தனர். கூட்ட நெரிசலுடன் மலைபாங்கான சாலையில் அந்த பஸ் சென்று கொண்டிருந்தது. வாசுக் அருகே சென்றபோது திடீரென அதன் முன்பக்க டயர் வெடித்து பஞ்சரானது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை அந்த பஸ் இழந்தது.

இதனையடுத்து சாலை தடுப்பில் அந்த பஸ் நேருக்கு நேர் மோதி சுமார் 50 அடி பள்ளத்தாக்கில் அந்த பாய்ந்தது. தரையில் மோதிய வேகத்தில் அந்த பஸ் அப்பளம்போல் நொறுங்கி தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணித்து கொண்டிருந்த சிறுவர்கள், பெண்கள் உள்பட 28 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கியும் உடல் கருகியும் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த 22 பேரை உள்ளூர் பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. 

Tags:    

Similar News