உலகம் (World)

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்

Published On 2024-09-20 08:30 GMT   |   Update On 2024-09-20 08:30 GMT
  • அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
  • வாக்குப்பெட்டிகள் ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும்.

கொழும்பு:

இலங்கையில் கடந்த 2022- ம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவியை விட்டு விலகி நாட்டை விட்டே ஓடினார்.

அதன் பிறகு இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டியதால் இலங்கை மெல்ல , மெல்ல பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது.

அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவி காலம் வருகிற நவம்பர் மாதம் 17-ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை ( 21-ந்தேதி ) நடை பெறுகிறது. நேற்று முன் தினத்துடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. தொடர்ந்து இடைவிடாமல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக மொத்தம் 13,400 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக போட்டியிடுகிறார். 1 கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

தேர்தலையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருப்பதற்காகவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடத்தும் வகையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா களம் இறங்கி உள்ளார்.

இடது சாரி அமைப்பான ஜனதா விமுக்கு பெரமுனாவின் தலைவர் அனுரா குமாரா திசநாயகே தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். இவர்களை தவிர இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே உள்பட 38 பேர் களத்தில் உள்ளனர்.

இருந்த போதிலும் ரணில் விக்ரமசிங்கே, அனுர குமார திச நாயகே, சஜித் பிரேம தாசா ஆகிய 3 பேர் இடையே தான் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாளை ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும். உடனடியாக ஓட்டு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News