உலகம்

மனித மூளையில் சிப் - அடுத்தக்கட்டத்திற்கு ரெடியான எலான் மஸ்க்..!

Published On 2024-07-11 02:42 GMT   |   Update On 2024-07-11 02:42 GMT
  • 2016 ஆம் ஆண்டு எலான் மஸ்க் நியூரோலிங்க் என்னும் நியூரோ டெக்னாலஜி நிறுவனத்தை தொடங்கினார்.
  • பார்கின்சன் மற்றும் ALS போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியும்.

பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் ஸ்பேஸ் எகஸ் மற்றும் டெஸ்லா போன்ற நிறுவனங்களை தொடங்கி அதில் பல ஆராய்ச்சிகளும் புது விதமான எதிர்கால சிந்தனையுடன் செயல்படும் வாகனங்கள் மற்றும் ராக்கெட்டுகளையும் உற்பத்தி செய்து வருகிறார்.

2016 ஆம் ஆண்டு எலான் மஸ்க் நியூரோலிங்க் என்னும் நியூரோ டெக்னாலஜி நிறுவனத்தை தொடங்கினார். எலான் மஸ்க் உடன் 7 விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் நிபுணர்கள் இணைந்து உருவாக்கப்பட்ட நிறுவனம் இது.

இந்நிறுவனத்தின் பிரதான குறிக்கோள் என்னவென்றால் சாதாரண மனித ஆற்றலை கணினி மற்றும் ஏ.ஐ தொழில்நுட்ப உதவியுடன் பன்மடங்கு உயர்த்துவது தான். இந்த நிறுவனம் மனிதர்களின் மூளையில் சிப் பொருத்தி அவர்களை எண்ணங்களால் கணினி, லேப்டாப் போன்ற சாதனங்களை பயன்படுத்த வைக்கும் குறிக்கோளுடன் துவங்கப்பட்டது.

இதன் மூலம் நரம்பு சம்பந்தப்பட்ட நோயான பார்கின்சன் மற்றும் ALS போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியும். இது தொடர்பான ஆராய்ச்சிகளில் நியூராங்க் ஆய்வாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.

அராய்ச்சியை தொடர்ந்து நியூராலிங்க் உருவாக்கிய சிப் முதற்கட்டமாக விலங்குகளில் பொருத்தி சோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு, இதனை மனிதர்களிடமும் பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. அதன்படி முதற்கட்டமாக கடந்த ஜனவரி மாதம் நோலண்ட் அர்பாக் மூளையில் பயொனிக் சிப்பை பொறுத்தினர்.

நோலண்ட் அர்பாக் பக்க வாத பாதிப்பு கொண்ட நபர். அவர் 8 ஆண்டுகளாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நியூரோ லிங்க் அறுவை சிகிச்சையின் மூலம் அவரால் தற்பொழுது கணினியில் சதுரங்கம் மற்றும் இதர கேம்களை விளையாட முடிகிறது. அவரின் மூளையில் உள்ள சிப்பை எண்ணங்களால் கட்டுப்படுத்தி கம்ப்யூட்டரை உபயோகிக்கவும் முடிகிறது.

இந்த வெற்றியை கணக்கில் கொண்டு அதே சிப்பை மூளையில் இன்னும் ஆழமாகவும், வெவ்வேறு அடுக்குகளிலும் வைத்து நியூராலிங்க் ஆய்வாளர்கள் சோதனை செய்து வருகின்றனர். இதன் மூலம் மனிதனுக்கு கம்ப்யூட்டருக்கும் ஒரு தொடர்பு உருவாகும்.

இதன் மூலம் கண்பார்வை இல்லாதவர்களுக்கு கூட கண்பார்வை வர வைக்க முடியும் எனவும், மற்ற சிப் பொறுத்திய மக்களிடம் டெலிபதி மூலம் தான் நினைத்ததை பறிமாற முடியும் என கூறுகிறார்.

இந்த சிப் நமது செல்போன் போல் தானாக அப்டேட் ஆகும் வசதியுடன் உருவாக்கப் போவதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்த திட்டத்தின் அடுத்த இலக்கு கை, கால்கள் செயலிழந்த நபர்களிடமும் இந்த ஆராய்ச்சியை நடத்தவுள்ளனர்.

எலான் மஸ்க் செய்வது ஒரு பக்கம் அறிவியல், விஞ்ஞானம் என மேலோங்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தாலும், மற்றொரு பக்கம் இது இயற்கைக்கு புறம்பானது. இதன் எதிர்வினை நாளை மனித இயல்பையும் , மனிதத்தையும் கேள்விக்குறியாக்கும் என்ற அச்சம் பரவலாக எழுகிறது.

Tags:    

Similar News