உலகம்

சீனாவில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து- 16 பேர் பலி

Published On 2024-07-18 09:29 GMT   |   Update On 2024-07-18 09:29 GMT
  • சுமார் 75 பேர் மீட்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
  • தீ விபத்துகளுக்கு மின்சாரம் மற்றும் எரிவாயு குழாய்கள் பழுதடைந்ததே காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

சிச்சுவான் மாகாணத்தின் ஜிகோங் நகரில் உள்ள உயர் தொழில்நுட்ப மண்டலத்தில் அமைந்துள்ள 14 மாடி கட்டிடத்தில் நேற்று மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கதவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த சுமார் 75 பேர் மீட்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தில், மொத்தம் 16 பேர்உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் படி, கட்டுமான பணியின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் அவசரகால மேலாண்மை மற்றும் தேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிர்வாக அமைச்சகம், சம்பவம் குறித்து விசாரணை நடத்த பணிக்குழுவை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.

விபத்து விசாரணையில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள தீயணைப்பு நிபுணர்களும் அனுப்பப்படுவார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹோட்டல்கள், உணவகங்கள் போன்ற பொது இடங்களில் ஏற்படும் தீ விபத்துகளுக்கு மின்சாரம் மற்றும் எரிவாயு குழாய்கள் பழுதடைந்ததே காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.

அடுத்த மாதத்தில் நான்ஜிங் நகரில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News