உலகம் (World)

ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு தாய்லாந்தில் சட்டப்பூர்வ அங்கீகாரம்

Published On 2024-09-26 02:31 GMT   |   Update On 2024-09-26 02:31 GMT
  • ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்று.
  • ஒரே பாலின திருமணத்திற்கு அனுமதி அளித்த 3-வது நாடு தாய்லாந்து.

பாங்காங்:

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.

தென்கிழக்கு ஆசியா நாடுகளின் ஒன்றான தாய்லாந்தில் மன்னராட்சி நடக்கிறது. கடற்கரைகளை அதிகம் கொண்ட இந்த நாட்டின் பொருளாதாரம், சுற்றுலாத்துறையின் வருமானத்தை நம்பி உள்ளது.

மேலும் வெளிநாட்டவர்களை அதிகளவில் ஈர்க்கும் வகையில் பல்வேறு சலுகைகளை தாய்லாந்து வழங்குகிறது. இதனால் கேளிக்கைகளின் தேசமாக விளங்கும் தாய்லாந்துக்கு ஏராளமான வெளிநாட்டவர்கள் சுற்றுலாவுக்காக செல்கிறார்கள்.

ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் தாய்லாந்து விளங்குகிறது. இருப்பினும் தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்டப்பூர்வமாக அனுமதியளிக்கப்படாமல் இருந்தது. இதனால் ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக கடுமையான எதிர்ப்பை எதிர் கொண்டனர்.

மேலும் அவர்கள், தங்களுடைய திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படலாம் என கருதப்பட்டது.

இதனையடுத்து தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதற்கான மசோதா அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஆதரவுடன் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது.


பின்னர் அந்த நாட்டின் மன்னரின் ஒப்புதலுக்காக ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமண சட்டமசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமண சட்ட மசோதாவுக்கு அந்த நாட்டின் மன்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் வருகிற ஜனவரி மாதத்தில் இந்த சட்டம் அமலுக்கு வரும் என அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

தைவான் மற்றும் நேபாளத்திற்கு அடுத்தபடியாக ஆசியாவில் ஒரே பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கும் 3-வது நாடு என்ற சிறப்பை தாய்லாந்து பெறுகிறது.

Tags:    

Similar News