உலகம் (World)

அமெரிக்காவில் ஹெலன் சூறாவளி- 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Published On 2024-09-30 16:35 GMT   |   Update On 2024-09-30 16:35 GMT
  • அமெரிக்காவில் சூறாவளியால் மொத்தம் ரூ.7,96,002 கோடி முதல் ரூ.9,21,687 கோடி வரை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
  • குடியிருப்புவாசிகளில் 20 லட்சம் பேர் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர்.

அமெரிக்காவை ஹெலன் சூறாவளி புயல் கடந்த வியாழக்கிழமை நெருங்கியது. இதனை தொடர்ந்து, புளோரிடா பகுதியில் சூறாவளி பலவீனமடைந்து வெள்ளி கிழமை கரையை கடந்தது.

இதனால், பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தி சென்றது. சூறாவளியால் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

பல வீடுகள், கட்டிடங்கள் சூறாவளியால் சேதமடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், ஜார்ஜியா மாகாணத்தில் பலர் உயிரிழந்தனர். அவர்களில் மற்றவர்களை பாதுகாப்பதற்காக சென்ற தீயணைப்பு வீரர்களும் அடங்குவர். புளோரிடா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினாவும் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்காவில் ஹெலன் சூறாவளி புயல் தாக்கத்திற்கு 116 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு கரோலினா மற்றும் டென்னசீ மாகாணங்களில் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. இந்த பகுதிகளில் வசித்து வரும் குடியிருப்புவாசிகளில் 20 லட்சம் பேர் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக 800 மத்திய அவசரகால மேலாண் கழக அதிகாரிகள் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சூறாவளியால் அமெரிக்காவில் மொத்தம் ரூ.7,96,002 கோடி முதல் ரூ.9,21,687 கோடி வரை பாதிப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News