உலகம் (World)

சிறையில் இம்ரான்கானை இருட்டு அறையில் அடைத்து சித்ரவதை- முன்னாள் மனைவி குற்றச்சாட்டு

Published On 2024-10-17 02:14 GMT   |   Update On 2024-10-17 02:14 GMT
  • இம்ரான்கானை அவரது குடும்பத்தினர் மற்றும் வக்கீல்கள் சந்திப்பதற்கு பஞ்சாப் மாகாண அரசு தடைவிதித்துள்ளது.
  • இம்ரான்கான் அடைக்கப்பட்டிருக்கும் அறையில் மின்சாரத்தை துண்டித்துவிட்டனர்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனைப் பெற்று பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஓர் ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இம்ரான்கானுக்கு சிறை அதிகாரிகள் பல்வேறு நெருக்கடிகளை அளித்து வருவதாக அவரது கட்சி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சிறையில் இம்ரான்கானை இருட்டு அறையில் அடைத்து சித்ரவதை செய்வதாக அவரது முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியுள்ளதாவது:-

இம்ரான்கானை அவரது குடும்பத்தினர் மற்றும் வக்கீல்கள் சந்திப்பதற்கு பஞ்சாப் மாகாண அரசு தடைவிதித்துள்ளது. மேலும் அவர் வாரத்துக்கு ஒரு முறை லண்டனில் உள்ள தனது மகன்களுடன் தொலைபேசியில் பேசி வந்த நிலையில் தற்போது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இம்ரான்கான் அடைக்கப்பட்டிருக்கும் அறையில் மின்சாரத்தை துண்டித்துவிட்டனர். அவர் சிறை அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. இருட்டு அறையில் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு சித்ரவதைக்கு ஆளாகி உள்ளார். இதனால் அவரது உடல்நிலை குறித்து மிகுந்த கவலை எழுந்துள்ளது. எனவே அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த பத்திரிகையாளரான ஜெமிமா கோல்ட்ஸ்மித்துக்கும், இம்ரான்கானுக்கும் 1995-ல் திருமணமான நிலையில் 2004-ல் அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்ததும், இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளதும் குறிப்படத்தக்கது.

Tags:    

Similar News