உலகம்

இஸ்ரேலிய பயங்கரவாதம்... இஸ்லாமிய நாடுகளின் கூட்டணிக்கு அழைப்பு விடுத்த துருக்கி அதிபர்

Published On 2024-09-08 03:28 GMT   |   Update On 2024-09-08 03:28 GMT
  • இந்த வார தொடக்கத்தில் எகிப்து அதிபர் துருக்கி சென்று எர்டோகனுடன் காசா போர் நிலவரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
  • துருக்கிய மற்றும் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஐசெனுா் எஸ்கி இஸ்ரேலிய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்

இஸ்ரேலிய  பயங்கரவாதம் 

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 40,000 துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். போர் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் துருக்கி நாட்டின் அதிபர் இஸ்ரேலிய பயங்கரவாதத்துக்கு எதிராகக் கூட்டணி அமைக்க இஸ்லாமிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 

இஸ்லாமிய நாடுகளின் கூட்டணி 

நேற்று இஸ்தான்புல் அருகே கூட்டம் ஒன்றில் பேசிய துருக்கி அதிபர் தாயேப் எர்டோகன், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு விரிவாகிக்கொண்டே வருகிறது. இஸ்ரேலின் இந்த திமிரையும், அடாவடித்தனத்தையும், இஸ்ரேலிய பயங்கரவாதத்ததையும் அடக்க ஒரே வழி இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பதே என்று தெரிவித்துள்ளார்.

 

ராஜாங்க உறவுகள் 

மேலும் எகிப்து மற்றும் சிரியா உடனான ராஜாங்க உறவுகளை மேம்படுத்தும் முயற்சியில் துருக்கி உள்ளது. இதன்மூலம், அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஒன்று திரண்டு ஒரே அணியாக நிற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லெபனான் மற்றும் சிரியாவும் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்தில் உள்ளது என்று எர்டோகன் தெரிவித்துள்ளார். இந்த வார தொடக்கத்தில் எகிப்து அதிபர் துருக்கி சென்று எர்டோகனுடன் காசா போர் நிலவரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். 12 வருடங்களுக்குப் பிறகு எகிப்து அதிபர் ஒருவர் துருக்கி வந்துள்ளது கவனிக்கத்தக்கது.

உயிரிழந்த பெண்ணும் உலக அரசியலும்

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பெய்டா பகுதியில் யூத குடியிருப்புகள் விரிவாக்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களை நோக்கி இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சமூக செயல்பாட்டாளரான ஐசெனுா் எஸ்கி (26) என்ற அமெரிக்கப் பெண் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

 

துருக்கிய மற்றும் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஐசெனுா் எஸ்கி சர்வதேச ஒற்றுமை இயக்கத்தில் உறுப்பினராக இருந்நதவர். அவரது கொலைக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த கொலைக்கு துருக்கி அதிபர் எர்டோகன் தனது பேச்சின்போது கண்டனம் தெரிவித்து ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான இஸ்லாமிய நாடுகளின் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளது மத்திய கிழக்கில் முக்கிய நகர்வாக பார்க்கப்டுகிறது. 

Tags:    

Similar News