உலகம் (World)

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 112-ஆக உயர்வு

Published On 2024-09-29 06:25 GMT   |   Update On 2024-09-29 06:25 GMT
  • கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
  • வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

நேபாளத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தலைநகர் காத்மாண்டுவில் 226 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

மேலும் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். இந்த நிலையில் நேபாளம் முழுவதும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக காத்மாண்டு பள்ளத்தாக்கில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 64 பேரை காணவில்லை. இடைவிடாது மழை பெய்ததால் காத்மாண்டுவின் முக்கிய நதியான பாக்மதியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. நேபாளம் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நாட்டின் சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

பல நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் சீர்குலைந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன. சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது.

Tags:    

Similar News