உலகம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தார் நேபாள பிரதமர் பிரசந்தா

Published On 2024-07-12 12:20 GMT   |   Update On 2024-07-12 12:20 GMT
  • நேபாளத்தில் 5-வது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் பிரதமர் பிரசந்தா.
  • இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசந்தா தோல்வி அடைந்தார்.

காத்மண்டு:

நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறமுடியாமல் போனது. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றதையடுத்து, நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் நீடித்தார் பிரசந்தா.

தொடர்ந்து ஏற்பட்ட கூட்டணி மாற்றத்தால் பிரதமர் பிரசந்தா 4 முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெற்றார்.

இதற்கிடையே, நேபாளத்தில் ஜூலை 12-ம் தேதி ஐந்தாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி பிரதமர் பிரசந்தா பாராளுமன்ற செயலகத்திற்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில், நேபாள பிரதிநிதிகள் சபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பிரதமர் பிரசந்தா தோல்வி அடைந்தார். அவருக்கு ஆதரவாக 63 வாக்குகள் மட்டும் கிடைத்தன. அவருக்கு எதிராக 194 வாக்குகள் பதிவாகின.

இதைத்தொடர்ந்து, நேபாள காங்கிரஸ் சார்பில் அமையும் புதிய கூட்டணி அரசில் கே.பி.சர்மா ஒலி பிரதமராக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசந்தா பிரதமரான பின் பாராளுமன்றத்தில் நடத்தப்படும் 5-வது நம்பிக்கை வாக்கெடுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News