உலகம் (World)

ரஷியாவுக்கு 12 ஆயிரம் வீரர்களை அனுப்பிய வட கொரியா.. 'வீடியோ' ஆதாரங்கள் சிக்கின - ஜெலன்ஸ்கி அலர்ட்!

Published On 2024-10-21 01:33 GMT   |   Update On 2024-10-21 01:38 GMT
  • தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் 12 ஆயிரம் பேரை வடகொரியா அனுப்பியிருப்பதை தென்கொரிய உளவு அமைப்பு கண்டறிந்துள்ளது.
  • இந்த வீடியோவை உக்ரைன் உளவுப் பிரிவு உறுதி செய்துள்ளது.

தென் கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு அச்சறுத்தலாக விளங்கும் அணு ஆயுத நாடு வட கொரியா. தற்போது ரஷியாவுடன் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நெருக்கம் காட்டி வருவது நிலைமையை இன்னும் மோசமாகியுள்ளது.

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளதால் பொருளாதார பாதிப்பை சந்தித்து இருக்கும் வடகொரியாவுக்கு எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் ரஷியா , சீனா ஆகிய நாடுகள் ஆதரவு அளிக்கின்றன. இதற்கிடையே சமீபத்தில் தென் கொரியாவை எதிரி நாடாக அதிகாரபூர்வமாக அறிவித்த வட கொரியா அமெரிக்காவுக்கு அணுஆயுத மிரட்டல் விடுத்திருந்தது.

 

இந்நிலையில் மேற்கு நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் எதிராக மறைமுகமாக கடந்த 2 வருடங்களாக நடத்துவரும் உக்ரைன் போரில் வட கொரியா பங்கேற்றுள்ளதாக தகவல்கள் மட்டுமின்றி அதற்கான ஆதாரங்களும் கிடைத்து வருகின்றன. அதாவது, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு உதவும் விதமாக தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் 12 ஆயிரம் பேரை வடகொரியா அனுப்பியிருப்பதை தென்கொரிய உளவு அமைப்பு கண்டறிந்துள்ளது.

இது குறித்து வட கொரியாவும் ரஷியாவும் எதுவும் பேசாத நிலையில் டஜன் கணக்கான வட கொரிய வீரர்கள் ரஷிய ராணுவ தலத்தில் பயிற்சி எடுத்து சோர்ந்து ஓய்வு எடுப்பது, ரஷிய ராணுவ உபகரணங்களை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை உக்ரைன் உளவுப் பிரிவும் கண்டறிந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

எனவே உக்ரைன் ரஷியா போர் அடுத்த மேலும் தீவிரமடையும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே சமீபத்தில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக ரஷியா மீது 100 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது உக்ரைன். மேலும் ரஷியாவின் 2 ஆயுத தயாரிப்பு மையங்களும் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

Similar News