உலகம் (World)

வலையில் சிக்கிய அரிய வகை மீன்.. ஒரே இரவில் கோட்டீஸ்வரரான பாகிஸ்தான் மீன் வியாபாரி

Published On 2023-11-10 12:16 GMT   |   Update On 2023-11-10 14:32 GMT
  • அரிய வகை மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.
  • பரிசு தொகையை தனது குழுவினருடன் பகிர்ந்து கொள்வதாக ஹாஜி கூறினார்.

பாகிஸ்தான் கராச்சி நகரை சேர்ந்தவர் ஹாஜி பலோச். இவர், இப்ராஹிம் ஹைதேரி மீன்பிடி கிராமத்தில் வசித்து வருகிறார். மீன்பிடி தொழில் செய்து வரும் ஹாஜி தான் பிடிக்கும் மீன்களை ஏலத்தில் விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஹாஜியும் அவரது குழுவும் கடந்த திங்கட்கிழமை அன்று அரபிக்கடலில் இருந்து தங்க மீன் அல்லது "சோவா" என்று அழைக்கப்படும் அரிய வகை மீனைப் பிடித்தனர்.

கராச்சி துறைமுகத்தில் மீனவர்கள் தாங்கள் பிடித்த மீனை ஏலம் விடுத்தபோது சுமார் 7 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. இந்த அரிய வகை மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.

சோவா மீன் விலை உயர்ந்ததாகவும், அரிதானதாகவும் கருதப்படுகிறது. ஏனெனில் அதன் வயிற்றில் உள்ள உறுப்புகள் சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. மீனில் இருந்து ஒரு நூல் போன்ற பொருள் அறுவை சிகிச்சை முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

பெரும்பாலும் 20 முதல் 40 கிலோ வரை எடையுள்ள மற்றும் 1.5 மீட்டர் வரை வளரக்கூடிய மீன், கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விரும்பப்படுகிறது.

பரிசு பெற்ற 7 கோடி ரூபாய் பணத்தை தனது ஏழு பேர் கொண்ட குழுவினருடன் பகிர்ந்து கொள்வதாக ஹாஜி கூறினார்.

Tags:    

Similar News