உலகம்

கல்பனா சாவ்லா மரணத்தால் பயந்த நாசா.. பூமிக்கு திரும்பும் ஸ்டார் லைனர் - சுனிதா வில்லியம்ஸ் நிலை?

Published On 2024-08-31 09:34 GMT   |   Update On 2024-08-31 09:34 GMT
  • ஸ்டார் லைனர் விண்கலம் தற்போது இவர்கள் இன்றி வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை 6.04 மணிக்குப் பூமியை நோக்கிய பயணத்தைத் தொடங்கும்
  • கடந்த 2003ஆம் ஆண்டு நாசா சார்பில் விண்வெளி ஆராய்ச்சி பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் போது விண்கலம் வெடித்து சிதறியதில் கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5 ஆம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுனிதா மற்றும் புட்ச் ஆகியோர் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு எட்டு நாட்களில் பூமிக்க திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

 

இதன் காரணமாகக் கடந்த 80 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளனர். இருவரையும் பூமிக்கு அழைத்த வர இருந்த ஸ்டார் லைனர் விண்கலம் தற்போது இவர்கள் இன்றி வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை 6.04 மணிக்குப் பூமியை நோக்கிய பயணத்தைத் தொடங்கும் ஸ்டார் லைனர் விண்கலம் என்று சுமார் 6 மணி நேரம் பயணித்து விண்கலம் மறுநாள் 12.03 மணிக்கு பூமியை அடையும் என்று நாசா அறிவித்துள்ளது.

 

பூமிக்குத் திரும்ப உள்ள ஸ்டார் லைனர் விண்கலத்திலேயே ஏன் இவர்கள் இருவரையும் அழைத்து வர வில்லை என்று நாசா விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது. அதாவது, இதுபோன்ற பயணத்தின்போது விண்கலம் வெடித்து உயிரிழந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் கல்பனா சாவ்லாவின் மரணமே தற்போது சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பழுதுபட்ட விண்கலத்தில் அழைத்து வர வேண்டாம் என்ற முடிவை நாசா எடுக்க காரணமாக அமைத்துள்ளது.

 

இதனாலேயே இன்னும் 8 மாதங்கள் கழித்து அடுத்த வருடம் பிப்ரவரியில் இருவரையும் பூமிக்கு அழைத்து வரும் முடிவுக்கு நாசாவை தள்ளியுள்ளது. கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்துள்ளோம் என்ற நாசாவைச் சேர்ந்த பில் நெல்சனின் கூற்று இதை உறுதிப்படுத்துகிறது. கடந்த 2003ஆம் ஆண்டு நாசா சார்பில் விண்வெளி ஆராய்ச்சி பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் போது விண்கலம் வெடித்து சிதறியதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News