உலகம்

சர்வதேச மணல் சிற்பப் போட்டி: தங்கப் பதக்கம் வென்றார் சுதர்சன் பட்நாயக்

Published On 2024-07-12 16:14 GMT   |   Update On 2024-07-12 16:14 GMT
  • மாஸ்கோவில் சர்வதேச மணல் சிற்பப் போட்டி நடைபெற்றது.
  • இதில் இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் தங்கம் வென்றார்.

மாஸ்கோ:

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கடந்த 4-ம் தேதி முதல் இன்று (12-ம் தேதி) வரை மணலில் சிற்பங்கள் உருவாக்குவது தொடர்பான சர்வதேச போட்டி நடத்தப்பட்டது.

சர்வதேச அளவில் இருந்து இந்தப் போட்டியில் பங்கேற்க 21 கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அவர்களில் ஒருவர் சுதர்சன் பட்நாயக்.

இந்நிலையில், இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் தங்கப்பதக்கம் வென்றார்.

இந்தப் போட்டியில், 14-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஒடியா கவிஞரான அவரது பக்தரான பலராம் தாஸ் உடன் தேர் மற்றும் ஜெகநாதரை சித்தரிக்கும் 12 அடி சிற்பத்தை வடிவமைத்து இருந்தார். இவரது இந்த சிற்பம் தேர்வு செய்யப்பட்டு சுதர்சன் பட்நாயக்கிற்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. விருது வென்றது குறித்து சுதர்சன் பட்நாயக் கூறியதாவது:

இங்கு நடைபெற்ற சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப் விழாவில் தங்கப் பதக்கத்துடன் கோல்டன் சாண்ட் மாஸ்டர் விருதை வென்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது மணல் கலை நாட்டிற்கு பெருமை சேர்த்தது பெருமைக்குரியது.

மகாபிரபு ஜெகநாத் மற்றும் மணல் கலையின் நிறுவனர் பலராம் தாஸ் ஆகியோரின் மணல் சிற்பத்தை வெளிநாட்டில் உருவாக்க வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. பூரியில் உலகப்புகழ் பெற்ற ரதயாத்திரை நடந்து வருகிறது. எனவே, மகாபிரபுவின் ஆசீர்வாதத்துடன் இந்த விழாவில் மகாபிரபு ஜெகநாதரின் மணல் ரதத்தை உருவாக்கி உள்ளேன் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Tags:    

Similar News