உலகம் (World)

சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய துபாய் போலீசார்

Published On 2022-08-14 03:15 GMT   |   Update On 2022-08-14 03:15 GMT
  • தனது பிறந்த நாள் அன்று போலீஸ் அதிகாரியாக விருப்பப்பட்ட ஹூத் ஹத்தாத் என்ற சிறுமியின் ஆசையை போலீசார் நிறைவேற்றினர்.
  • சிறுமி போலீசார் பயன்படுத்தும் சொகுசு ரோந்து காரில் அழைத்துச் செல்லப்பட்டார். நகரின் சில பகுதிகளுக்கு ரோந்து காரில் வலம் வந்தார்.

துபாய்:

துபாய் நகரில் ஹூத் ஹத்தாத் என்ற அரபு நாட்டைச் சேர்ந்த 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். அவர் தனது பிறந்த நாள் அன்று போலீஸ் அதிகாரியாக வேண்டும் என பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்தார். இதனையடுத்து அவர்களின் பெற்றோர் தங்களது மகளின் விருப்பத்தை எவ்வாறு நிறைவேற்றுவது? என நினைத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் போலீஸ் தலைமையகத்துக்கு தனது மகளின் விருப்பத்தை இ-மெயில் மூலம் அனுப்பினர். இதனை பரிசீலனை செய்த அதிகாரிகள் சிறுமியின் பிறந்த நாள் ஆசையை நிறைவேற்ற உறுதியளித்தனர். இதையடுத்து சிறுமியின் பிறந்தநாளான நேற்று போலீஸ் அலுவலகத்துக்கு சீருடையில் வந்தார். அவரை போலீஸ் அதிகாரிகள் வரவேற்று பூங்கொத்து வழங்கினர். மேலும் பிறந்த நாளையொட்டி சிறுமிக்கு பரிசு அளித்து மகிழ்ச்சிபடுத்தினர்.

பின்னர் போலீஸ் அதிகாரி இருக்கையில் அமர வைத்தனர். அப்போது போலீஸ் துறையில் உள்ள பல்வேறு வகையான பணிகள் குறித்தும் சிறுமிக்கு தெரிவித்தனர். மேலும் போலீஸ் அலுவலகத்தின் ஒவ்வொரு பகுதியினையும் அழைத்து சென்று காண்பித்தனர்.

தொடர்ந்து சிறுமி போலீசார் பயன்படுத்தும் சொகுசு ரோந்து காரில் அழைத்துச் செல்லப்பட்டார். நகரின் சில பகுதிகளுக்கு ரோந்து காரில் வலம் வந்தார். இதன் காரணமாக சிறுமி மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

தனது பிறந்த நாள் ஆசையை நிறைவேற்றிய துபாய் போலீசாருக்கு அந்த சிறுமியும், அவரது பெற்றோரும் நன்றி தெரிவித்தனர். இது குறித்து அவரது தந்தை கூறும்போது, தனது வேண்டுகோளை ஏற்று விரைவாக பரிசீலனை செய்து மகளின் பிறந்த நாள் ஆசையை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தார்.

இது குறித்து போலீசின் அதிகாரி அலி யூசுப் யாகூப் கூறும்போது, ''சிறுமியின் ஆசையை நிறைவேற்றும் திட்டத்தின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் அந்த சிறுமியும், அவரது குடும்பத்தினர் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இத்தகைய திட்டத்தின் மூலம் பல்வேறு வயதுடைய பல்வேறு நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்'' என்றார்.

Tags:    

Similar News