உலகம்

இஸ்ரேலில் இருந்து 235 இந்தியர்களுடன் புறப்பட்டது 2வது விமானம்

Published On 2023-10-13 22:05 GMT   |   Update On 2023-10-13 23:21 GMT
  • காசாவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள்.
  • இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு ஆபரேஷன் அஜய் திட்டத்தை தொடங்கியது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த போரால் இஸ்ரேல் மற்றும் காசாவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்க மத்திய அரசு களத்தில் இறங்கி இருக்கிறது. இதற்காக 'ஆபரேஷன் அஜய்' என்ற பெயரில் அதிரடி மீட்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதன்படி இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவார்கள் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.

அந்தவகையில் நேற்றைய தினம் 212 இந்தியர்கள் அடங்கிய முதல் குழுவுடன் சிறப்பு விமானம் ஒன்று இந்தியா வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து டெல் அவிவ் நகரில் இருந்து 235 இந்தியர்களை அழைத்துக் கொண்டு 2-வது சிறப்பு விமானம் இந்தியா புறப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய மந்திரி ஜெய்சங்கர் தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News