குஜராத் பால விபத்து - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்
- குஜராத் பால விபத்தில் பலியானோருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்தார்.
- குஜராத் பால விபத்துக்கு ரஷியா, சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகள் இரங்கல் தெரிவித்தன.
வாஷிங்டன்:
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு, கடந்த 26-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. ஆனால், 5 நாட்களில் பாலம் இடிந்து விழுந்து பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.
இந்தப் பால விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 177 பேர் மீட்கப்பட்டும் உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.
இந்தத் துயர சம்பவத்திற்கு உலக நாடுகளில் இருந்து இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்,
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபா, இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லிஸ், சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சகம், போலந்து நாட்டின் வெளிவிவகார மந்திரி பிக்நியூ ரா உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், குஜராத் பால விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நமது இதயம் இந்தியாவுடன் இருக்கிறது. பாலம் இடிந்ததில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஜில் மற்றும் நானும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பல உயிர்களை இழந்ததற்காக குஜராத் மக்களுடன் இணைந்து துக்கப்படுகிறோம் என தெரிவித்துள்ளார்.