உலகம் (World)

கோப்புப்படம் 

கம்பெனிக்கு கட்டுப்படி ஆகாது.. ரூ. 300 நகையை ரூ. 6 கோடிக்கு விற்ற பலே வியாபாரி - பெண் கதறல்

Published On 2024-06-12 06:29 GMT   |   Update On 2024-06-12 06:29 GMT
  • தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகளை வாங்கினார்.
  • அதிர்ச்சி அடைந்த செரிஷ் உடனே இந்தியா புறப்பட்டு வந்தார்.

ராஜஸ்தானை சேர்ந்த நகை கடை உரிமையாளர் அமெரிக்க பெண்ணிடம் ரூ. 300 மதிப்புள்ள போலி நகையை ரூ. 6 கோடிக்கு விற்பனை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த செரிஷ் என்ற பெண் ஜெய்பூரில் உள்ள ஜோரி பஜாரில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகளை வாங்கியுள்ளார்.

ரூ. 6 கோடி கொடுத்து வாங்கிய நகைகளை அமெரிக்காவில் நடைபெற்ற கண்காட்சியில் செரிஷ் காட்சிப்படுத்த ஆயத்தமானார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது, செரிஷ் வாங்கிய விலை உயர்ந்த நகைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த செரிஷ், உடனே இந்தியா புறப்பட்டு வந்தார்.

இந்தியாவில் தரையிறங்கிய செரிஷ் நேரடியாக நகை வாங்கிய கடைக்கு விரைந்தார். அங்கு கடையின் உரிமையாளர் கௌரவ் சோனியை சந்தித்து போலி நகை குறித்து விளக்கம் கேட்டார். செரிஷ்-இன் குற்றச்சாட்டுகளை கௌரவ் சோனி மறுத்துள்ளார். இதையடுத்து காவல் நிலையம் விரைந்த செரிஷ் கௌரவ் சோனி மீது புகார் அளித்தார்.

மேலும், தனது புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி செரிஷ் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் உதவி கேட்டார். பிறகு, அமெரிக்க தூதரகம் கொடுத்த அழுத்தத்தின் பேரில் ஜெய்பூர் காவல் நிலையத்தில் கௌரவ் சோனி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து கௌரவ் சோனி மற்றும் அவரது தந்தை ராஜேந்திர சோனி ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்டனர். இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான கௌரவ் சோனியிடம் செரிஷ் பலக்கட்டங்களாக ரூ. 6 கோடி மதிப்பிலான போலி நகைகளை வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

Similar News