உலகம் (World)

உலகளவில் தனிநபர் மது நுகர்வு குறைவு...ஆனாலும் ஏற்கத்தக்கதல்ல

Published On 2024-06-26 11:52 GMT   |   Update On 2024-06-26 12:20 GMT
  • கடந்த 2019-ம் ஆண்டில் மது அருந்துவதால் 26 லட்சம் இறப்புகள் ஏற்பட்டது.
  • அந்த உயிரிழப்புகளில் முக்கால்வாசி பேர் ஆண்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

ஜெனீவா:

ஆல்கஹால் மற்றும் போதை பொருளால் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஒவ்வொரு ஆண்டும் மதுவினால் கிட்டத்தட்ட 30 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக இறப்பு விகிதம் சற்றே குறைந்திருந்தாலும், அது ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், மதுவினால் தூண்டப்பட்ட வன்முறை, துன்புறுத்தல், பல நோய்கள் உள்ளிட்டவை ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஏற்படும் 20-ல் ஒரு மரணத்துக்குக் காரணமாக உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் மது அருந்துவதால் 26 லட்சம் இறப்புகள் ஏற்பட்டது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி அந்த எண்ணிக்கை உலகளவில் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 4.7 சதவீதம் ஆகும். அந்த உயிரிழப்புகளில் முக்கால்வாசி பேர் ஆண்கள்.

2019-ம் ஆண்டில் மது காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளில் அதிகபட்சமாக 13 சதவீதத்தினர் 20 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள்.

மதுவினால் 2019-ல் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 16 லட்சம் பேர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்.

இவர்களில் 4,74,000 பேர் இதய நோய்களாலும், 4,01,000 பேர் புற்றுநோயாலும், 7,24,000 பேர் போக்குவரத்து விபத்துக்கள், சுய துன்புறுத்தல் உள்ளிட்ட காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள்.

9 ஆண்டுக்கு முன் 5.7 லிட்டராக இருந்த உலகளவில் தனிநபர் மது நுகர்வு 2019-ம் ஆண்டில் 5.5 லிட்டராகக் குறைந்துள்ளது என தெரிவிக்கிறது.

Tags:    

Similar News