உலகம் (World)

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்ப உறுப்பினர்கள் 13 பேரை விஷம் வைத்து கொன்ற பெண்

Published On 2024-10-07 02:07 GMT   |   Update On 2024-10-07 02:32 GMT
  • பிரேத பரிசோதனையில் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
  • இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கராச்சி:

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 13 பேரும் உயிரிழந்தனர்.

பிரேத பரிசோதனையில் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இது அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வாலிபரை திருமணம் செய்து வைக்கவும் மறுத்தனர்.

இது இளம்பெண்ணுக்கு கடும் ஆத்திரத்தை உண்டாக்கியது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தனது குடும்பத்தையே தீர்த்துக்கட்டும் சதிகாரியாக மாறினார். இதற்கான திட்டத்தை தனது காதலன் யோசனைபடி அரங்கேற்றினார்.

அதாவது வீட்டில் ரொட்டி சமைக்க பயன்படுத்தும் கோதுமை மாவில் விஷத்தை கலந்தார். இதுதெரியாமல் சம்பவத்தன்று அந்த கோதுமை மாவில் இளம்பெண்ணின் குடும்பத்தினர் ரொட்டி சமைத்து சாப்பிட்டு அனைவரும் உயிரிழந்தனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளம்பெண்ணை நேற்று போலீசார் கைது செய்தனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய், தந்தை உள்பட குடும்ப உறவுகள் 13 பேரை இளம்பெண் விஷம் வைத்த கொன்ற சம்பவம் பாகிஸ்தானில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News