செய்திகள்

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

Published On 2019-04-16 15:31 IST   |   Update On 2019-04-16 15:31:00 IST
தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கி.பி.1004ம் ஆண்டு கட்டத்தொடங்கி 1010-ம் ஆண்டு கட்டி முடித்தார். மாமன்னன் ராஜராஜன் காலத்தில் பெரியகோவிலில் நடந்த திருவிழாக்கள் பற்றி கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரியகோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடைபெற்றது. மேலும் பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. தேர் இருக்கும் இடமான மேலவீதியில் கடந்த 7-ந் தேதி தேர் அலங்காரம் செய்யப்பட்டதையடுத்து பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. நேற்று முதலே தஞ்சை மாவட்டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் தஞ்யில் குவிந்தனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. இதுமட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தேரோட்டத்தை காண அதிகளவில் வந்தனர்.

தேரோட்டத்தையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு பெரியகோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக முத்துமணி அலங்கார சப்பரத்தில் புறப்பட்டு தேர் மண்டபத்தை வந்தடைந்தனர். பின்னர் தியாகராஜர்- கமலாம்பாள் மட்டும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதற்காக 16½ அடி உயரத்துடன் 40 டன் எடை கொண்ட 3 அடுக்குகள் கொண்ட தேரில் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தியாகராஜருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து காலை 6.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. மாவட்ட கலெக்டர் அண்ணாத்துரை, போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் மேலவீதியில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி புறப்பட்டது. பக்தர்கள் ‘‘ஓம் நமச்சிவாய’’ என்ற கோ‌ஷங்களை எழுப்பியபடி தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். அப்போது மங்கள வாத்தியங்கள், கரகாட்டம், குச்சிப்புடி, தப்பாட்டம், செண்டை வாத்தியங்கள் இசைக்கப் பட்டன.

தஞ்சை மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி ஆகிய 4 ராஜ வீதிகளிலும் தேர் வலம் வந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக மேலராஜவீதியில் 3 இடங்களிலும், வடக்கு ராஜ வீதியில் 4 இடங் களிலும், கீழராஜ வீதியில் 4 இடங்களிலும், தெற்குராஜ வீதியில் 3 இடங்களிலும் தேர் நிறுத்தப்பட்டது.

பக்தர்கள் பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்து சாமிக்கு மாலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொடுத்தனர். பின்னர் மதியம் 11.45 மணிக்கு தேர் நிலை மண்டபத்தை வந்த டைந்தது.

இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளி நாட்டினர் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தஞ்சை நகரமே இன்று விழாக்கோலம் பூண்டது. போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவுப்படி பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News