search icon
என் மலர்tooltip icon

    மேஷம்

    தை மாத ராசிபலன்

    தன்னை சார்ந்தவர்களும் முன்னேற நினைக்கும் மேஷ ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் குரு வீட்டில் சஞ்சரிக்கின்றார். குருவின் பார்வை செவ்வாய் மீது பதிந்து `குரு மங்கள யோக'த்தை உருவாக்குகிறது. எனவே சுப காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். லாப ஸ்தானச் சனியின் ஆதிக்கத்தால் பொருளாதார நிலை உச்சம் பெறும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி கைகூடும்.

    மேஷ-குருவின் சஞ்சாரம்!

    மாதத் தொடக்கத்தில் மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கும் குருவால் வளர்ச்சி அதிகரிக்கும். வாய்ப்புகள் வாசல் தேடி வரும். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் குரு என்பதால் தந்தை வழி உறவில் இருந்த விரிசல் தானாக விலகும். சிந்தனைகள் வெற்றி பெறும் விதத்தில் செயல்பாடுகள் இருக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். தூர தேசத்தில் இருந்து வரும் தகவல் ஆதாயம் தருவதாக அமையும். வாகன யோகம் உண்டு. இட மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.

    தனுசு-சுக்ரன்!

    ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதி யானவர் சுக்ரன். குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம் தான். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொடுக்கல்-வாங்கல்கள் சீராகும். வாழ்க்கைத் துணையின் படிப்பிற்கேற்ற வேலைக்கு முயற்சி செய்திருந்தால் அது கிடைக்கும். உதிரி வருமானங்களும் உண்டு. அரசு வேலைக்கு முயற்சி செய்திருந்தவர்களுக்கு அது கை கூடும்.

    மகர-புதன்!

    ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்குப் புதன் வருகின்றார். எனவே `புத ஆதித்ய யோகம்' உருவாகின்றது. கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணியில் உள்ளவர்களுக்கு நிரந்தரப் பணி அமையலாம். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் உங்களைத் தேடி வரும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகளும், பொறுப்புகளும் கிடைக்கலாம்.

    மகர செவ்வாய் சஞ்சாரம்!

    பிப்ரவரி 4-ந் தேதி மகர ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். அது செவ்வாய்க்கு உச்ச வீடாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெறும் இந்த நேரம் உடல்நலம் சீராகும், உள்ளத்திலும் அமைதி கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவதில் இருந்த தடைகள் அகலும். கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது, கல்யாண சீர்வரிசைப் பொருட்களை வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். நாட்பட்ட நோய் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் எளிதில் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து அலைமோதும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பரிசீலனையில் இருந்த பதவி உயர்வு இப்பொழுது கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். மாணவ-மாணவிகளுக்கு கல்வியில் சாதனை படைக்கக்கூடிய நேரமிது. பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 15, 16, 21, 22, 26, 27, பிப்ரவரி: 6, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    ×