search icon
என் மலர்tooltip icon

    கன்னி

    ஆடி மாத ராசிபலன்

    அமைதியின் வழியில் பலருக்கும் நல்வழி கூறும் கன்னி ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு விரயாதிபதி சூரியனும், தனாதிபதி சுக்ரனும் இணைந்திருக்கிறார்கள். எனவே தனவரவு தாராளமாக வந்து கொண்டே இருக்கும். அதேநேரம் விரயங்களும் அதிகரிக்கும். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். 'புத ஆதித்ய யோக'மும், 'புத சுக்ர யோக'மும் இணைந்து செயல்படும் இந்த மாதத்தில் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

    குரு - செவ்வாய் சேர்க்கை

    மாதத் தொடக்கத்திலேயே குருவும், செவ்வாயும் இணைந்து, உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றனர். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவது நன்மைதான். 'குரு பார்க்கக் கோடி நன்மை' என்பதற்கேற்ப சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும். தங்கு தடை தானாக விலகும். ஒரு சிலருக்கு கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் யோகம் உண்டு. திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். திடீர் தனவரவு வந்து சேரும். தெய்வத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டு வீர்கள். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

    புதன் வக்ரம்

    கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன், ஆடி 5-ந் தேதி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் புதன் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. உள்ளத்தில் உற்சாகமும், அமைதியும் குறையும். சில காரியங்கள் முடிவடைவது போல் தோன்றினாலும், கடைசி நேரத்தில் கை நழுவிப் போக வாய்ப்பு அதிகம். தொழில் பங்குதாரர்களால் தொல்லைகள் ஏற்படும். கடமையில் தொய்வும், பணப் புழக்கத்தில் தடுமாற்றமும் வரலாம். எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது.

    சிம்ம - சுக்ரன்

    ஆடி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும்போது, விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கத்தான் செய்யும். குடும்பச் சுமை கூடும். கடுமையாக முயற்சித்தும் சில காரியங்கள் கைகூடாமல் போகலாம். எதையும் நினைத்த மாத்திரத்தில் செய்ய இயலாது. திசாபுத்தி பலமிழந்தவர்களுக்கு பணத்தட்டுப்பாடு உருவாகலாம். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இக்காலத்தில் அனுபவஸ்தர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடி வரும். மாணவ - மாணவிகளுக்கு கனவு நனவாகும். பெண்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் எளிதில் கிடைக்கும். வாழ்க்கைத் தேவை பூர்த்தியாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூலை: 19, 20, 31, ஆகஸ்டு: 1, 4, 5, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    ×