search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் நிவின் பாலி மீது பெண் பாலியல் புகார்- சிறப்பு புலனாய்வு குழு துபாய்க்கு செல்கிறது
    X

    நடிகர் நிவின் பாலி மீது பெண் பாலியல் புகார்- சிறப்பு புலனாய்வு குழு துபாய்க்கு செல்கிறது

    • துபாய் ஓட்டலில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் தெரிவித்தார்.
    • பாலியல் புகார் கூறிய பெண் மற்றும் அவரது கணவரிடம் சிறப்பு புலனாய்வு குழு நேற்று விசாரணை நடத்தியது.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவரங்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை அம்பலமாக்கியது. அதன் தொடர்ச்சியாக பல நடிகைகள் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினர்.

    அதன் அடிப்படையில் மலையாள திரையுலக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் வழக்கு பதியப்பட்டது. பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் நிவின் பாலி மீதும் வழக்கு பதியப்பட்டது.

    சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி துபாய் ஓட்டலில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில் நடிகர் நிவின் பாலி உள்பட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

    தன் மீது புகார் கூறிய அந்த பெண் யார் என்பது தனக்கு தெரியாது என்றும், அந்த பெண்ணை தான் சந்தித்ததே இல்லை என்றும் நடிகர் நிவின் பாலி கூறினார். மேலும் தன் மீதான குற்றச்சாட்டில் சதி இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

    அது மட்டுமின்றி புகார் கூறிய பெண் தனது குற்றச்சாட்டில், குறிப்பிடப்பட்டிருந்த நாளில் தான் துபாயில் இல்லை எனவும், கேரளாவில் இருந்ததாகவும் நடிகர் நிவின் பாலி தெரிவித்தார். மேலும் கேரளாவில் இருந்ததற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார்.

    இதையடுத்து அந்த பெண், தூக்க கலக்கத்தில் சம்பவம் நடந்த தேதியை மாற்றி கூறிவிட்டதாகவும், சம்பவம் நடந்தது வேறுநாள் என்றும் கூறி மற்றொரு நாளில் துபாயில் தங்கியிருந்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டார்.

    இதனைத்தொடர்ந்து பாலியல் புகார் கூறிய பெண் மற்றும் அவரது கணவரிடம் சிறப்பு புலனாய்வு குழு நேற்று விசாரணை நடத்தியது. அவர்கள் 2 பேரிடம் கொச்சியில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இருவரிடமும் சிறப்பு புலனாய்வு குழுவினர் வாக்குமூலம் பெற்றனர்.

    மேலும் இந்த விவகாரத்தில் மேல் விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழுவினர் துபாய் செல்ல உள்ளனர். பெண் புகாரின்படி சம்பவம் துபாயில் நடந்திருப்பதாக கூறப்பட்டிருப்பதால், அதன் உண்மை நிலையை கண்டறிய விசாரணை குழு துபாய் செல்ல முடிவு செய்துள்ளது.

    Next Story
    ×