search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஜெகதீசன் எங்கள் அணியின் தூணாக செயல்படுகிறார்- கவுசிக் காந்தி பாராட்டு
    X

    ஜெகதீசன்

    ஜெகதீசன் எங்கள் அணியின் தூணாக செயல்படுகிறார்- கவுசிக் காந்தி பாராட்டு

    • நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.
    • எங்களின் பல வெற்றிக்கு ஜெகதீசனின் பங்களிப்பு இருந்துள்ளது.

    கோவை:

    டி.என்.பி.எல். போட்டியில் கோவை கிங்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2-வது வெற்றியை பெற்றது.

    கோவை எஸ்.என்.ஆர்.கல்லூரி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது.

    கேப்டன் ஷாருக்கான் 28 பந்தில் 51 ரன்னும் (2 பவுண்டரி , 5 சிக்சர் ), சுரேஷ்குமார் 22 பந்தில் 32 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), அபிஷேக் தன்வர் 12 பந்தில் 28 ரன்னும் (2பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். சாய் கிஷோர் 2 விக்கெட்டும் , சித்தார்த், அலெக்சாண்டர், ஹரீஷ் குமார், சோனு யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    என். ஜெகதீசன் 51 பந்தில் 75 ரன்னும் ( 6 பவுண்டரி, 3 சிக்சர்) , சாய் கிஷோர் 33 பந்தில் 48 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். அபிஷேக் தன்வர் 3 விக்கெட்டும், அஜித்ராம், பாலு சூர்யா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். அந்த அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

    இந்த வெற்றி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கேப்டன் கவுசிக் காந்தி கூறியதாவது:-

    சிறப்பான பேட்டிங் மூலம் இந்த வெற்றியை பெற்றுள்ளோம். ஆனால் பல துறைகளில் இன்னும் கவனம் செலுத்தி முன்னேற வேண்டியுள்ளது. ஜெகதீசன் எங்கள் அணியின் தூணாக செயல்படுகிறார். எங்களின் பல வெற்றிக்கு அவரது பங்களிப்பு இருந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற சாய்கிஷோர் கூறும்போது, 'இந்த வெற்றியை பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சீசனில் எனது பேட்டிங் மேம்பட்டு இருக்கிறது. எனது பயிற்சியாளர் பிரசன்னாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

    கோவை கிங்ஸ் 3-வது தோல்வியை தழுவியது. இந்த அணி கேப்டன் ஷாருக்கான் கூறும்போது, பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் பந்து வீச்சில் போதுமான திறனை வெளிப்படுத்த தவறிவிட்டோம்.

    இந்த ஆடுகளத்தில் இன்னும் ஒரு வேகப்பந்து வீச்சாளரை களம் இறக்கி இருந்தால் நிலமை மாறி இருக்கலாம் என்றார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5-வது போட்டியிடும் திண்டுக்கல் டிராகன்சை 16-ந் தேதி எதிர்கொள்கிறது. கோவை அணி திருப்பூர் தமிழன்சை அதே தினத்தில் சந்திக்கிறது.

    இன்று நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. திருப்பூர் அணி 2-வது வெற்றிக்காகவும், சேலம் அணி முதல் வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன.

    Next Story
    ×