search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அரசனுக்காக அரக்கனை அழித்து நரசிம்மர் சுயம்புவாக வீற்றிருக்கும் தலம்
    X

    அரசனுக்காக அரக்கனை அழித்து நரசிம்மர் சுயம்புவாக வீற்றிருக்கும் தலம்

    • தங்களுடைய விருப்பம் நிறைவேறியபின் பக்தர்கள் இந்த நரசிம்ம சுவாமிக்கு தைலம், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள்.
    • பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், சந்தனம் மேலும் வஸ்திரம் முதலியவற்றை நரசிம்மருக்கு சமர்ப்பணம் செய்கின்றார்கள்.

    வசந்தராஜன் என்ற அரசன் விருத்தாசலத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான்.

    அவன் ஒரு நரசிம்மர் கோவிலைக் கட்ட விரும்பினான். வசந்தராஜனுக்கு பரகாசுரன் என்ற அரக்கன் பல தொல்லைகளை செய்து வந்தான்.

    அவன் அரக்கன் இரண்யகசிபுவின் உறவினன்.

    இந்த தொல்லைகளிலிருந்து விடுபட வசந்தராஜன் கடும் தவம் புரிந்தான். நரசிம்ம மூர்த்தி அவனுடைய தவத்தை மெச்சி அந்த அசுரனைக் கொன்றார்.

    அந்த அசுரனைக் கொன்ற நரசிம்ம மூர்த்தியின் உக்ரரூபத்தைக் கண்டு அஞ்சி வசந்தராஜன் ஸ்ரீலட்சுமித் தாயாரிடம் பகவானை சாந்தப்படுத்தும்படி வேண்டினான்.

    ஸ்ரீலட்சுமி தாயாரின் அரவணைப்பால் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சாந்தமாகி தன்னுடைய கொடூரமான முக பாவத்தை மாற்றிக் கொண்டு ஸ்ரீகனகவல்லித் தாயாரை தன்னுடைய மடியில் வீற்றிருக்கும்படி செய்தார்.

    அதோடு வசந்தராஜனுக்கு ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சாந்த மூர்த்தியாகக் காட்சியளித்தார்.

    தேவர்களும், முனிவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

    இதனால் வசந்தராஜன் ஸ்ரீநரசிம்ம சுவாமியிடம் இங்கேயே தங்கும்படி வேண்டினான்.

    அந்த அசுரனின் பெயரால் இந்த இடம் "பரிக்கல்புரம்" என்றாகிப் பிறகு நாளடைவில் பரிக்கல் எனப்பட்டது.

    மகாலட்சுமியின் அன்பான அரவணைப்பால் பகவான் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி தன் கோபத்தைத் தணித்து சாந்த மூர்த்தியான இடம் இதுவாகும்.

    இங்கு மகாலட்சுமி அவளுடைய வலது கரத்தால் சுவாமியை தழுவியும், பகவான் தன்னுடைய இடது கரத்தால் தாயாரை அரவணைத்தும் சேவை சாதிக்கிறார்.

    இந்த கோவில் முதலில் சிவப்பு செங்கற்களாலும், சுண்ணாம்பு மற்றும் மரத்தாலும் கட்டப்பட்டிருந்தது.

    முஸ்லிம்களின் படையெடுப்பால் இக்கோவில் மிகவும் சிதைந்து போய், சிதிலமடைந்து அழிந்து போய் விட்டது.

    கர்நாடக அரசன் நரசிம்மன் என்பவன் இத்திருக்கோவிலை மறுபடியும் கறுப்பு பளிங்கு கற்களால் கட்டினான்.

    இப்பொழுதும் மாத்வ மதத்தைச் சேர்ந்த கர்நாடக மாநிலத்தவர்கள் பரிக்கல் நரசிம்ம சுவாமியை தங்களுடைய குல தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.

    கிராமத்தின் நடுவில் இக்கோவில் உள்ளது. ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார். ஸ்ரீகனகவல்லி தாயாரைத் தம்முடைய மடியில் இருத்திக் கொண்டுள்ளார்.

    இவர் சுயம்பு மூர்த்தியாவார். ஸ்ரீவியாசராயர் ஆஞ்சநேயரின், 732 சிலைகளை தென் இந்தியாவில் நிறுவினார். அவற்றில் இங்குள்ள ஆஞ்சநேயரும் ஒருவராவார்.

    சிறந்த வேலை, உயர்ந்த பதவியை அடைய விரும்புகிறவர்களுக்கு ஸ்ரீபரிக்கல் நரசிம்மர் நிச்சயம் பேரருள் புரிகின்றார்.

    தங்களுடைய விருப்பம் நிறைவேறியபின் பக்தர்கள் இந்த நரசிம்ம சுவாமிக்கு தைலம், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள்.

    பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், சந்தனம் மேலும் வஸ்திரம் முதலியவற்றை நரசிம்மருக்கு சமர்ப்பணம் செய்கின்றார்கள்.

    சில நேரங்களில் தங்களுடைய முடியையும் காணிக்கையாகக் கொடுக்கின்றார்கள்.

    அவர்கள் பெரிய விளக்கு, மாவிளக்கு (அதாவது அரிசி மாவு, நெய் முதலியவற்றை கலந்தது) ஏற்றி பெருமாளுக்குப் பூஜை செய்வார்கள்.

    மேலும் சில பக்தர்கள் காதுகுத்தல், அங்கபிரதட்சணம் (அதாவது ஈரத்துணியுடன் பிரகாரத்தில் உருண்டு பிரண்டு அங்கபிரதட்சணம்) செய்வார்கள்.

    ஸ்ரீபரிக்கல் நரசிம்ம சுவாமிக்கு எப்பொழுதெல்லாம் அபிஷேகம் செய்யப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கும், கனகவல்லித் தாயாருக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    விழுப்புரம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் 21 கி.மீ. தொலை தூரத்தில் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது.

    இந்த புனிதமான இடம் இரண்டு நதிகளுக்கு இடையில் (தென்பெண்ணை, கடிலம் ஆறுகளுக்கு) அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் போல் இந்த இடமும் சிறப்பு மிகுந்தது.

    Next Story
    ×