search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பைபிள் கூறும் வரலாறு: ரூத்து
    X

    பைபிள் கூறும் வரலாறு: ரூத்து

    அற்புதமான ஒரு சிறுகதையை வாசிக்கும் உணர்வை இந்த பரபரப்பான நூல் நமக்குத் தருகிறது. இதன் பழமைக்காகவும், அதில் தெறிக்கும் இலக்கிய புலமைக்காகவும் இந்த நூலை வாசிப்பவர்களும் உண்டு.
    விவிலியத்தில் மூன்று நூல்கள் பெண்களின் பெயரால் வருகின்றன. அவற்றில் ரூத்து, எஸ்தர் போன்றவை பழைய ஏற்பாட்டிலும், யூதித்து எனும் நூல் இணை திருமறையிலும் வருகிறது.

    ரூத்து நூல் எபிரேய மொழியில்‘ மெஹில்லாத் ரூத்’ என அழைக்கப்படுகிறது. இதற்கு ‘ரூத்து பற்றிய சுருளேடு’ என்று பொருள்.

    மேலோட்டமான வாசிப்புக்கு எளிமையான ஒரு இனிய கதை போலத் தோன்றினாலும் இந்த நூல் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

    இந்த ரூத்துதான் தாவீது மன்னனின் முப்பாட்டி. அந்தத் தாவீது மன்னனின் வழிமரபாக வந்தவர்கள்தான் இயேசுவின் மண்ணுலகத் தந்தையர் யோசேப்பும், மரியாவும்.

    இயேசுவின் வழிமரபோடு இணைந்திருப்பதாலேயே இந்த நூல் பல ஆன்மிக அர்த்தங்களை உள்ளடக்கியதாய் மதிக்கப்படுகிறது.

    இதை எழுதியவர் யார் என்பது தெளிவாக இல்லை. இறைவாக்கினர் சாமுவேல் எழுதியதாக சிலர் சொல்வதுண்டு. ஆனால் சாமுவேலின் காலத்திற்குப் பிந்தைய செய்திகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது அந்த வாதத்தை வலுவிழக்கச் செய்கிறது.

    ஆனால் இது நீதித் தலைவர்களின் காலத்தில் எழுதப்பட்ட நூல் என்பதில் மட்டும் மாற்றுக் கருத்து இல்லை.

    நகோமிக்கு இரண்டு மகன்கள், ஓர்பா, ரூத்து என இரண்டு மருமகள்கள். காலம் வலிகளை அவளுக்குப் பரிசளிக்கிறது. மோவாபு எனும் அன்னிய நாட்டில் வாழ்கின்றனர். கணவன் இறக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பின் மகன்களும் இறந்து விடுகின்றனர்.

    இரண்டு மருமகள்களோடு நிராயுதபாணியாகும் நகோமி மருமகள்களை அனுப்பி விடுகிறார். இரண்டு மருமகள்களும் இஸ்ரயேல் குலத்தைச் சாராத அன்னிய பெண்கள்.

    ஓர்பா மாமியாரின் சொற்படி அவரை விட்டு விலகிச் செல்கிறார். ரூத்தோ அவரை ஓர் அன்னையைப் போலப் பற்றிக் கொண்டு விலக மறுக்கிறார். இனிமேல் உங்கள் தேசமே என் தேசம், உங்கள் கடவுளே என் கடவுள் என அவர் நகோமியோடு பெத்லேகேமுக்குப் பயணிக்கிறார்.

    இந்த பெத்லேகேம்தான் தாவீது பிறந்த ஊர். இந்த பெத்லேகேம்தான் இயேசு பிறந்த ஊர்.

    அந்நாட்களில் கைம்பெண்கள் கவனிப்பாரின்றி விடப்பட்டனர். அவர்களுக்குரிய பாதுகாப்பு கிடைப்பதும் கேள்விக்குறியாய் இருந்தது. ஆனால் ஆண்டவரை நம்பி வரும்போது அனைவரையும் அவர் பரிவுடன் ஆதரிக்கிறார்.

    அந்நாட்களில் வயல்களில் அறுவடை நடக்கும் போது சிந்துகின்ற கதிர்களைப் பொறுக்க ஏழைகள் வருவதுண்டு. கிடைக்கின்ற சொற்ப தானியத்தைக் கொண்டு அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை ஓட்டுவார்கள். அவர்களுக்கு பல இன்னல்கள் நேரவும், பணியாளர்களால் தொந்தரவு நேரவும் வாய்ப்புகள் உண்டு.

    ரூத்து தன்னையும், மாமியாரையும் காப்பாற்ற கதிர் பொறுக்கச் செல்கிறார். உழைப்பின் தேவையை ரூத்தின் செயல் விளக்குகிறது. புதிய தேசம். புதிய நிலம். புதிய மனிதர்கள். எனினும் துணிச்சலாய் செல்கிறார் ரூத்து.

    மனிதனின் முயற்சிகளின் வழியில்தான் இறைவனின் அருள் வழங்கப்படுகிறது. சோம்பேறி களின் வாசலில் இறையருள் பொழியப்படுவதில்லை.

    இறைவனின் அருளால் அவர் செல்வது போவாசு எனும் ஒருவருடைய வயலுக்கு. அவர் நகோமியின் நெருங்கிய உறவினர். ரூத்தை மணந்து கொள்ள தகுதி யுடைய உறவினர்.

    அந்நாட்களில் கணவர் இறந்தால், கணவனின் சகோதரர் அல்லது நெருங்கிய உறவினர் அவளை மணந்து, வாழ்வு கொடுக்கலாம் எனும் சட்டம் இருந்தது.

    போவாசு, ரூத்தின் நல்லெண்ணத்தையும், இறை பக்தியையும், மாமியாரை நேசிக்கும் இதயத்தையும், சுயநலமற்ற சிந்தனையையும் கண்டு அவரை மணந்து கொள்கிறார் என கதை அழகாக நகர்கிறது.

    போவாசு காட்டிய பரிவு, போவாசை மணந்து கொள்ள நகோமி சொன்ன யோசனை, ரூத்தின் துணிச்சல் என பல செய்திகள் இந்த நூலில் மிக அற்புத இலக்கியச் சுவை யுடன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    பழங்கால செவி வழிச்செய்திகளும், மரபுக் கதைகளும் போவாசு-ரூத் வாழ்ந்த இடமே பின்னர் இயேசு பிறந்த இடம் என்கின்றன. போவாசும், ரூத்தும் மணமுடிப்பது அந்த பரம்பரையில் இறைமகன் இயேசு எனும் மீட்பரின் வரவுக்கான மறைவுச் செய்தியாய்ப் பார்க்கப்படுகிறது.

    பெத்லேகேமுக்குக் கிழக்கே ஒரு மைல் தொலைவில் ஒரு நிலப்பரப்பு உண்டு. அது “போவாஸ் நிலப்பரப்பு” என அழைக்கப்படுகிறது. இங்கேதான் ரூத்து கதிர் பொறுக்கினார் என்கிறது மரபுச் செய்தி.

    இதே நிலப்பரப்பில்தான் இயேசுவின் பிறப்பை தூதர்கள் இடையர்களுக்கு அறிவித்தார்கள் எனும் சுவாரசியச் செய்தியும் காணக்கிடைக்கிறது.

    இறைவனின் மீது அன்பு கொள்கின்ற யாரையும் அவர் அரவணைத்துக் கொள்கிறார். யாரையும் கைவிடுவதில்லை. அவர் எந்த இனமாய் இருந்தாலும், எந்த தேசமாய் இருந்தாலும் அவர்களை அரவணைக்கிறார்.

    அற்புதமான ஒரு சிறுகதையை வாசிக்கும் உணர்வை இந்த பரபரப்பான நூல் நமக்குத் தருகிறது. இதன் பழமைக்காகவும், அதில் தெறிக்கும் இலக்கிய புலமைக்காகவும் இந்த நூலை வாசிப்பவர்களும் உண்டு.

    எனினும் இது இலக்கியச் சுவையைத் தாண்டி மீட்பின் செய்தியையும், இறைவனின் அன்பினையும் சொல்லும் நூல் என்பதே உண்மையாகும்.

    - சேவியர்
    Next Story
    ×