search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையப்பர் கோவில் சுவாமி தேர் வடம்போட்டு தயார் நிலையில் உள்ள காட்சி.
    X
    நெல்லையப்பர் கோவில் சுவாமி தேர் வடம்போட்டு தயார் நிலையில் உள்ள காட்சி.

    நெல்லையப்பர் கோவிலில் நாளை தேரோட்டம்

    நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. நாளை (புதன்கிழமை) காலையில் தேரோட்டம் நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், வீதி உலா வருதல், கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

    7-ம் திருநாளான நேற்று காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 8.30 மணிக்கு சுவாமி தந்தப்பல்லக்கிலும், அம்பாள் முத்து பல்லக்கில் தவழ்ந்த கோலத்தில் வீதி உலா நடந்தது. இரவு 9 மணிக்கு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 10 மணிக்கு சுவாமி நடராஜர் திருக்கோலத்தில் மேளதாளம் முழங்க வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.

    8-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு நடராஜர் வெள்ளை சாத்தியும், 8.30 மணிக்கு பச்சை சாத்தியும் வீதி உலா நடக்கிறது. மாலை 4 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலாவும், இரவு 10 மணிக்கு சுவாமியும், அம்பாளும் தேர்களை பார்வையிடும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்ககிளி வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார படைப்பு தீபாராதனையும், அன்னதானமும் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (புதன்கிழமை) காலை நடக்கிறது. இதற்காக நெல்லையப்பர் கோவிலில் உள்ள தேர்கள் சுத்தம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    நாளை அதிகாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருள்கின்றனர். காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை இழுக்கிறார்கள்.

    முதலில் விநாயகர் தேர், 2-வதாக சுப்பிரமணியர் தேர், 3-வது சுவாமி தேர், அதன்பிறகு அம்பாள் தேர் இழுக்கப்படும். இந்த தேர்களுக்கு பின்னால் சண்டிகேசுவரர் தேர் வரும். ஒரே நாளில் தேரை நிலைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருப்பதால் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்சோதி, உதவி ஆணையாளர் அருணாசலம், ஆய்வாளர் முருகன், நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் சுகுணாசிங், பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் நேரடி மேற்பார்வையில் 1,500 போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுதவிர 4 ரதவீதிகளிலும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு தேரோட்ட நிகழ்ச்சிகள் கண்காணிக்கப்படுகின்றன. ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. 
    Next Story
    ×