search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தசரா திருவிழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் அம்மன் சப்பரங்கள் அணிவகுத்து நின்ற காட்சி
    X
    தசரா திருவிழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் அம்மன் சப்பரங்கள் அணிவகுத்து நின்ற காட்சி

    தசரா திருவிழா: 11 அம்மன் கோவில் சப்பரங்கள் அணிவகுப்பு

    தசரா திருவிழாவைமுன்னிட்டு பாளையங்கோட்டையில் 11 அம்மன் சப்பரங்கள் அணிவகுத்து நின்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
    நெல்லை மாநகரில் தசரா விழாவுக்கு தனிப்புகழ் பெற்ற பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதேபோல் பாளையங்கோட்டையில் உள்ள பேராச்சி அம்மன், தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமாகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன் கோவில், புது உலகம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களிலும் நேற்றுமுன்தினம் தசரா விழா துர்கா பூஜையுடன் தொடங்கியது.

    பின்னர் இரவில் அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. பேராச்சி அம்மன் சப்பரம் தவிர மற்ற 11 அம்மன் கோவில் சப்பரங்களும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பாளையங்கோட்டை தெருக்களில் பவனி வந்தது.

    நேற்று காலை 6 மணிக்கு 11 அம்மன் கோவில் சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் அணிவகுத்து நின்றன. அப்போது ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து அம்மனை வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து மேல தெரு வழியாக, வடக்குத்தெருவுக்கு சென்று ராஜகோபாலசுவாமி கோவில் முன்பு 6.30 மணிக்கு அனைத்து சப்பரங்களும் அணிவகுத்து நின்றன. பின்னர் அங்கிருந்து அனைத்து அம்மன் கோவில் சப்பரங்களும் புறப்பட்டு காலை 7 மணிக்கு ஆயிரத்தம்மன் கோவில் முன்பு அணிவகுத்து நின்றன. அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர்.

    இதைத்தொடர்ந்து அனைத்து சப்பரங்களும் கோவிலுக்கு சென்றன. அங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன்கள் கொலு இருந்து சிறப்பு பூஜை நடைபெறும்.

    வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தசரா திருவிழா நடக்கிறது. 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு 12 சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் அணிவகுத்து நிற்கும். இரவு 12 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு 12 அம்மன்களும் அணிவகுத்து நிற்க சூரசம்ஹாரம் நடக்கிறது.

    Next Story
    ×