search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டிருந்ததை படத்தில் காணலாம்.
    X
    தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டிருந்ததை படத்தில் காணலாம்.

    தஞ்சை பெரிய கோவிலில் 1 டன் பச்சரிசி சாதத்தால், பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்

    ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பெருவுடையாருக்கு 1 டன் பச்சரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

    ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளன்று சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். அதேபோல தஞ்சை பெரியகோவிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு நேற்று மாலை அன்னாபிஷேகம் நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்காக பக்தர்களால் 1,000 கிலோ(1 டன்) அரிசியும், 1000 கிலோ காய், கனிகளும் வழங்கப்பட்டன. பக்தர்கள் வழங்கிய அரிசியை பச்சரிசி சாதம் தயார் செய்து மாலையில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் பலவகை காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடை பெற்றது. அன்னாபிஷேகத்தையொட்டி பெருவுடையாரை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் கோவில் வளாகத்தில் ஆங்காங்கே அமர்ந்த வண்ணம் இருந்தனர். மாலை 4.30 மணிக்கு அன்னாபிஷேகம், மற்றும் காய்கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு நடை திறக்கப்பட்டதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    இதேபோல் தஞ்சையில் உள்ள கொங்கனேசுவரர் கோவில், காசி விசுவநாதர்கோவில், வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×