search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா இன்று தொடங்குகிறது
    X

    முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா இன்று தொடங்குகிறது

    அனைத்து முருகன் கோவில்களில் இன்று கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. இதையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
    சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. இதையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    சேலம் உடையாப்பட்டி கந்தாஸ்ரமத்தில் கந்த சஷ்டி விழாவையொட்டி இன்று காலையில் ஞான ஸ்கந்த குருநாதரிடமிருந்து சக்திவேல் பெற்று மகாலட்சுமி துர்கா பரமேஸ்வரியிடம் வைத்து கந்தசஷ்டி விழா தொடங்குகிறது.

    வருகிற 12-ந் தேதி வரை குருகுல பிரார்த்தனை மண்டபத்தில் சக்திவேலுக்கு சிறப்பு பூஜைகளும், தண்டயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. 13-ந் தேதி அதிகாலை சுப்ரபாதமும், 5.30 மணிக்கு ருத்ரஜபமும், 6.45 மணிக்கு கோ பூஜையும், 7 மணிக்கு குருபூஜையும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து மதியம் விசேஷ அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது.

    இதேபோல், சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் பாலசுப்பிரமணிய சாமி கோவில், குமரகிரி பாலதண்டாயுதபாணி கோவில், ஊத்துமலை முருகன் கோவில், பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் இன்று முதல் கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. இதையொட்டி தினமும் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்படுகிறது. சேலம் சுகவனேசுவரர் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் இந்தாண்டு கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறாது.

    சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் நேற்று கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. கோவில் முன்பு ஏற்றப்பட்ட திருக்கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மூலவர் பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், உற்சவர் சண்முகநாதர், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், இரவில் லட்சார்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    விழாவின் முக்கிய நாளான வருகிற 13-ந் தேதி கந்தசஷ்டி விழாவையொட்டி காலை 7 மணிக்கு சஷ்டிபாராயணம் நடக்கிறது. பின்னர் சக்திவேலுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து சத்ரு சம்ஹார ஷோமம், 36 தடவை சஷ்டி பாராயணம், 108 வலம்புரி சங்காபிஷேகம், கலசாபிஷேகம், லட்சார்ச்சனை பூர்த்தி செய்து மதியம் 12 மணிக்கு தங்க கவசம் சாத்துப்படி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு ஆட்டுக்கிடா வாகனத்தில் சண்முகநாதர் புறப்பட்டு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மகா அபிஷேகமும், செந்தூர்வேலன் அலங்காரமும், 108 தங்க மலர்களால் அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடக்கிறது.

    வருகிற 14-ந்தேதி பகல் 11 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசை வருதலும், 12 மணிக்கு திருக்கல்யாணம், உற்சவமூர்த்திக்கு மகா தீபாராதனை, அன்னதானம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்துள்ளனர். 
    Next Story
    ×