search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி மலைக்கோவிலில் தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
    X
    பழனி மலைக்கோவிலில் தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

    பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

    கடும் வெயில் நிலவியதையும் பொருட்படுத்தாமல், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். ரோப்கார், மின்இழுவை ரெயில்வழியாகவே மலைக்கோவிலுக்கு அதிகம் சென்றனர்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்கள் நடைபெறும் போது தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர்.

    திருவிழா காலங்கள் மட்டுமின்றி வாரவிடுமுறை, கோடைவிடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் பழனிக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். அதன்படி வாரவிடுமுறை தினமான நேற்று பழனியில் பக்தர்கள் குவிந்தனர். ஆனால் பழனி பகுதியில் நிலவும் கடும் வெயில் காரணமாக பக்தர்கள் குடைபிடித்தபடியும், துண்டை தலையில் போட்டுக்கொண்டும் சென்றனர்.

    பழனி கோவிலுக்கு வந்த பக்தர்கள் நேற்று படிப்பாதையை அதிகம் பயன்படுத்தாமல் மின்இழுவை ரெயில், ரோப்காரில் மலைக்கோவிலுக்கு அதிகம் சென்றனர். இதனால் அங்கு கூட்டம் அதிகம் காணப்பட்டது. மேலும் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் நடந்து செல்வதற்காக கயிற்றால் ஆன விரிப்பு தரையில் விரிக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக பெரிய கேன்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. கடும் வெயிலை பொருட்படுத்தாது வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே பழனியில் வெயில் வாட்டி வதைத்து வருவதால், மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் கூடுதல் விரிப்புகளை விரிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×