search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னியாகுமரியில் திருப்பதி ஏழுமலையான்
    X

    கன்னியாகுமரியில் திருப்பதி ஏழுமலையான்

    முக்கடல் சங்கமிக்கும் புண்ணிய பூமியான கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திரம் அமைந்துள்ள வளாகத்தில் திருப்பதி ஏழுமலையானுக்காக தனி ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
    திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால்தான் திருப்பதி வெங்கடாஜலபதியைத் தரிசனம் செய்ய தினம், தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தப்படி உள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையானை நினைத்தவுடன் சென்று, பார்த்து தரிசனம் செய்து விட இயலாது. ஏழுலையான் எப்போது நம்மை அழைக்கிறாரோ, அப்போதுதான் திருப்பதிக்கு சென்று அவரை தரிசனம் செய்ய முடியும் என்று சொல்வார்கள்.

    ஒரு தடவை திருப்பதிக்கு சென்றாலே போதும், மனம் இனம் புரியாத வகையில் ஆனந்தமும், அமைதியும் அடையும். நீண்ட வரிசையில், மணிக்கணக்கில் கால் கடுக்க நின்று கடும் நெரிசல்களுக்கு மத்தியில் “கோவிந்தா.... கோவிந்தா...” என்று உள்ளம் உருக முன் மண்டபத்துக்குள் நுழைந்த அடுத்த ஓரிரு நிமிடங்களில் நம்மை வெளியில் கொண்டு வந்து விடுவார்கள்.

    அழகாக, ஆஜானுபாகுவாக நின்று அருள்பாலிக்கும் ஏழுமலை சில வினாடிகளே கண்குளிர்பாலித்து தரிசிக்க முடியும். சில சமயம் ஓரிரு நிமிடங்கள் ஏழுமலையானை நிதானமாக பார்த்து நம் கோரிக்கைகளை முன் வைத்து விட முடியும். அந்த நேரத்தில் நமக்கு கிடைக்கும் ஆனந்தத்துக்கு அளவே இருக்காது.

    இந்த ஆனந்தத்தை அனுபவிக்கவும், இந்த பிறவியில் எல்லா செல்வங்கள் பெற்று வாழவும், மறுபிறவி வேண்டாம் என்ற முக்திக்காகவும்தான் தினந்தோறும் ஏழுமலையானிடம் சரண் அடைய லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி நோக்கி அலை, அலையாக வந்த வண்ணம் உள்ளனர்.

    சில பக்தர்கள் வாரம் தோறும் ஏழுமலையானை பார்த்து ஆனந்தம் கொள்வார்கள். சில பக்தர்கள் மாதம் தோறும் ஒரு தடவை சென்று ஏழுமலையானை பார்த்து வருவார்கள். சிலர் ஆண்டுக்கு ஒரு தடவை புரட்டாசி மாதம் மட்டும் திருப்பதிக்கு செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.



    ஏழுமலையானை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ள வியாபாரிகள், தங்களது கடை வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை ஏழுமலையானுக்கு கொடுத்து விடுவதுண்டு. ஏழுமலையானை அவர்கள் தங்கள் கடையின் ஒரு பங்குதாரர் போல கருதி இந்த கைங்கர்யத்தை செய்து வருகிறார்கள். இப்படி திருப்பதி ஏழுமலையானுக்கு பல தரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். திருப்பதி ஏழுமலையானை அடிக்கடி தரிசனம் செய்பவர்களில் பெரும் பாலானவர்கள் ஆந்திராவின் தென் பகுதியையும் தமிழ் நாட்டின் வட மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள்தான். மற்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு திருப்பதி ஏழுமலையானை அடிக்கடி பார்த்து தரிசிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

    அத்தகைய பக்தர்கள் “எப்போது திருப்பதிக்கு போவோம்?” என்ற ஏக்கத்துடன் இருப்பார்கள். சில பகுதி மக்களுக்கு திருப்பதி ஏழுமலையானை ஆண்டுக்கு ஒரு தடவை தரிசிப்பது கூட இயலாத காரியமாக இருக்கும்.

    அப்படிப்பட்ட மக்களை திருப்பதி ஏழுமலையானே தேடி வந்து, ஓரிடத்தில் நிலை கொண்டு அருள்பாலித்தால் எப்படி இருக்கும்? “ஏழுமலையானே... வந்து விட்டாரா.... இதை விட வாழ்வில் வேறு என்ன பாக்கியம் வேண்டும்” என்று மனம் குதூகலம் கொள்ள, கண்ணீர் மல்க சொல்வார்கள்.

    அப்படி ஒரு ஆன்மிக குதூகலத்தை தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்கள் அனுபவிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது. ஆம் திருப்பதி ஏழுமலையான் தென் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டார். முக்கடல் சங்கமிக்கும் புண்ணிய பூமியான கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திரம் அமைந்துள்ள வளாகத்தில் திருப்பதி ஏழுமலையானுக்காக தனி ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

    திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் எத்தகைய ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகிறதோ, அவை அனைத்தும் கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவி ஆலயத்திலும் கடைபிடிக்கப்படுகிறது.
    Next Story
    ×