search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சொர்ண ஆகர்ஷண பைரவர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளியதையும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.
    X
    சொர்ண ஆகர்ஷண பைரவர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளியதையும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.

    தேய்பிறை அஷ்டமி: சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பூஜை

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பரிவார மூர்த்தியாக உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது.
    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பரிவார மூர்த்தியாக உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நேற்று நடந்தது. 5 காலமாக இந்த பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்களால் வழங்கப்பட்ட பால், தேன், இளநீர், அரிசி மாவு, சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப்பொடி உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களை கொண்டு பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சொர்ண ஆகர்ஷண பைரவர், ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பிறகு பக்தர்களால் வழங்கப்பட்ட செவ்வரளி பூக்களால் பைரவருக்கு மலர் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் தேனியை சேர்ந்த ஹரே ராமா ஹரே கிருஷ்ணா குழுவினரை சேர்ந்த குருக்களால் ராமநாம கீர்த்தனைகள் பாடப்பட்டன. இதைத்தொடர்ந்து தீபாராதனை நடந்தது. அப்போது, ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷங்கள் முழங்க பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த பூஜையில் திண்டுக்கல் மட்டுமின்றி கரூர், ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இதேபோல் பழனி முருகன் கோவிலில் மங்கம்மாள் மண்டபத்தில் உள்ள சேத்தர பால பைரவருக்கும், சண்டிகாதேவிக்கும் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×