search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொங்கணகிரி கந்தபெருமாள் கோவிலில் 22-ந்தேதி கும்பாபிஷேக விழா
    X

    கொங்கணகிரி கந்தபெருமாள் கோவிலில் 22-ந்தேதி கும்பாபிஷேக விழா

    திருப்பூரில் வருகிற 22-ந்தேதி கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளையினர் செய்து வருகிறார்கள்.
    திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரியில் மிகவும் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சமேத கந்தபெருமான் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேக விழா நடத்த திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை முடிவு செய்தது. இதன்படி அறக்கட்டளை சார்பில் முதற்கட்டமாக கோவிலை பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

    பின்னர் கோவிலில் 72 அடி உயரத்தில், சிற்ப சாஸ்திர முறைபடி 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி நிறைவு பெற்றது. மேலும் கோவிலுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் திருவண்ணாமலைக்கு அடுத்தபடியான கிரிவலப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், குளியலறை, சுகாதார வளாகம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. கோவிலின் உள்பிரகாரம் கருங்கல் பதித்து, மூல கோபுரங்களுக்கு வர்ணம் பூசுதல் என அனைத்து திருப்பணிகளும் முடிவடைந்துள்ளன.

    கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி காலை நடைபெறுகிறது. முன்னதாக 18-ந்தேதி காலை 8.30 முதல் மதியம் 1.30 மணி வரை மூஷிக வாகனனுக்கு முதல் யாக பூஜையுடன் விழா தொடங்குகிறது. மேலும் தினமும் காலை மற்றும் மாலையில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

    19-ந்தேதி மாலை 4 மணிக்கு அணைபாளையம் மாகாளியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை மற்றும் தீர்த்தக்குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக கந்தபெருமான் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா 22-ந்தேதி காலை 6 மணிக்கு 6-ம் கால யாக பூஜையுடன் தொடங்குகிறது.

    காலை 8.45 மணிக்கு மஹாபூர்ணாஹூதி, தீபாராதனையுடன் கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 9.30 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத கந்தபெருமான் கோவில் விமானம், நூதன ராஜகோபுரம், மூலஸ்தான கோபுரம் மற்றும் மூலாலய பரிவார மூர்த்திகளுக்கு திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. விழாவையொட்டி காலை 7 மணி முதல் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு மகா அபிஷேகம், திருக்கல்யாணம், கந்தபெருமான் திருவீதி உலா ஆகியவையும் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக விழாவையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சி, கும்மியாட்டமும், ஆன்மிக சொற்பொழிவு, காவடியாட்டம், சிறப்பு விருந்தினர்களுக்கு பாராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. விழாவுக்கும் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×