search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஈரோட்டில் மகிமாலீசுவரர் கோவில் தேரோட்டம்
    X

    ஈரோட்டில் மகிமாலீசுவரர் கோவில் தேரோட்டம்

    ஈரோட்டில் மகிமாலீசுவரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    ஈரோட்டில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றான மகிமாலீசுவரர் கோவில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் திருவேங்கடசாமி வீதியில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறுகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 22-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. அப்பரடிகள் திருஅவதாரம், அப்பர் நீற்றரையில் இருந்து மீளுதல், பல்லவன் சரணாகதி விழா, தண்ணீர் பந்தல் திருநாள், சிறப்பு கட்டமுது திருநாள் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் மாலையில் மகிமாலீசுவரருக்கும், மங்களாம்பிகைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    தேர்த்திருவிழாவையொட்டி நேற்று காலை அப்பரடிகள் குரு வழிபாடு நடைபெற்றது. பின்னர் மங்களாம்பிகை உடனமர் மகிமாலீசுவரர் உற்சவ சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    மகிமாலீசுவரரின் தேர் அசைந்தாடி செல்ல தொடர்ந்து அப்பர் எழுந்தருளிய தேரும், மங்களாம்பிகை எழுந்தருளிய தேரும் சென்றது. கோவிலில் இருந்து தொடங்கிய தேரோட்டம் திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன்கோவில் வீதி வழியாக மணிக்கூண்டு வரை சென்று நிறுத்தப்பட்டது. பின்னர் மாலையில் பக்தர்கள் மீண்டும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பன்னீர்செல்வம் பூங்கா, திருவேங்கடசாமி வீதி வழியாக வந்து கோவிலில் நிலை வந்தடைந்தது. தேரோட்டத்தின்போது பக்தர்கள் வழிநெடுக நின்று மகிமாலீசுவரரை தரிசனம் செய்தனர்.

    தேரோட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பெண்கள் சுற்றி நின்றுகொண்டு ஆன்மிக பாடல்களை பாடினார்கள். அப்போது தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பெரிய புராணம் உள்பட 12 திருமுறை பாடல்களை கரவோசை எழுப்பி பாடினர். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மூவர் தேவார தமிழிசை விழா நடைபெறுகிறது.

    நாளை (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு திருவீதி உலா நடக்கிறது. இதில் கூத்தபெருமான் (மகிமாலீசுவரர்) தங்க சப்பரத்திலும், சிவகாமி அம்மன் வெள்ளி சப்பரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். வருகிற 2-ந் தேதி காலை 7 மணிக்கு கோவிலில் இருந்து சாமி புறப்பட்டு காவிரி ஆற்றில் நீராடுதல் நிகழ்ச்சியும், 3-ந் தேதி மாலை 6.30 மணிக்கு 63 நாயன்மார்கள் ஊர்வலமும் நடைபெறுகிறது.

    Next Story
    ×