search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மங்கலம்பேட்டையில் பிரசித்தி பெற்ற மங்களநாயகி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    மங்கலம்பேட்டையில் பிரசித்தி பெற்ற மங்களநாயகி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    மங்களநாயகி அம்மன் கோவில் தேரோட்டம்

    மங்கலம்பேட்டையில் மங்களநாயகி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    மங்கலம்பேட்டையில் பிரசித்தி பெற்ற மங்களநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 16-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தினசரி காலையில் அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, இரவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதிஉலா நடந்து வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காலையில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டதும், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மங்களநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    இதையடுத்து காலை 10.30 மணிக்கு கோவிலில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் மங்கலம்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை (வெள்ளிக்கிழமை) விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×