என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
ஏரியில் அமைந்த பூதநாதர் ஆலயம்
- 7 முதல் 8-ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தைச் சேர்ந்தவை.
- கட்டிடக்கலை வட இந்திய பாணியில் அமைந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பாதாமியில் உள்ள அகத்தியர் ஏரியின் கிழக்கே அமைந்திருக்கிறது, பூதநாதர் குழு கோவில்கள். இவை கி.பி. 7-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்த இந்து சமய ஆலயங்களாகும். இவை இரண்டு துணைக் குழுக்களாக அமைந்துள்ளன.
அதில் ஒன்று கிழக்கு பூதநாதர் குழு அல்லது பூதநாதர் முதன்மை குழு என்று அழைக்கப்படுகிறது. இது 7 முதல் 8-ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தை சேர்ந்தவை. இவை பெரும்பாலும் திராவிட கட்டிடக் கலை பாணியில் கட்டப்பட்டுள்ளன.
மற்றொன்று வட பூமிநாதர் குழு அல்லது மல்லிகார்ஜூன குழு என்று அழைக்கப்படுகிறது. இவை 11 முதல் 12-ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் கட்டப்பட்டவை. இதன் பெரும்பாலான கட்டிடக்கலை வட இந்திய பாணியில் அமைந்துள்ளது.
இந்த பூதநாதர் கோவிலானது, பழமையான இந்து கோவில்களில் ஒன்று. இந்த ஆலயம் ஒரு மைய மண்டபத்துடன், எண்கோணம், கனசதுரம், வட்டம் ஆகிய அமைப்புகளில் நான்கு விதமாக கட்டிட அமைப்புகளைக் கொண்டு காட்சியளிக்கிறது.
மைய மண்டபமானது, சிவலிங்கம் வீற்றிருக்கும் சிறிய சதுர வடிவ கருவறைக்கு முன்பு இருக்கிறது. மலையின் அடிவாரத்தில், நீர் நிலைக்குள் இருப்பது போல் இந்த ஆலயம் கட்டப்பட்டிருப்பது, பார்ப்பவர்களின் கண்களை கவர்வதாக இருக்கிறது.
கருவறையின் உச்சியில் (விமானம்) திராவிட கட்டிடக் கலை பாணியிலான 'திரிதால' (மூன்று தளங்கள்) கட்டுமானம் கொண்டிருக்கிறது. கீழ் பகுதியில் பாதபந்த மற்றும் கும்ப அமைப்பு உள்ளது. விமானச் சுவர்களில் பிரம்மகாண்ட பாணியில் செவ்வக வடிவ தூண்களும், கின்னரர்கள், கந்தர்வர்கள் ஆகியோரின் சிலைகளும் வடிக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது தளமானது, கீழ் தளத்தை விட சற்று சிறியதாக உள்ளது. மூன்றாவது தளம், இரண்டாவது தளத்தின் பாதி அளவில் காணப்படுகிறது. உச்சியில் குட்டையான சிகரத்துடன் காட்சி தருகிறது.
கோவிலின் அடிவாரத்தின் வலதுபுறத்தில் கங்கை தேவி தன் வாகனமான மகரத்தின் மீது அமர்ந்திருக்கிறார். இடது புறத்தில் யமுனாதேவி தன் வாகனமான ஆமையின் மீது வீற்றிருக்கிறார். தவிர விநாயகர், மகிஷாசுரமர்த்தினி உருவங்கள் காணப்படுகின்றன.
பிரதான கோவிலின் வடக்கே ஒரு சிற்றாலயம் உள்ளது. இது முதலில் மகாவிஷ்ணுவுக்காக கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்தக் கோவிலை, லிங்காயத்து மரபினர் கைப்பற்றினர். அவர்கள்தான் இதற்கு ஒரு வெளிப்புற மண்டபத்தைக் கட்டி, கருவறைக்குள் நந்தியையும், சிவலிங்கத்தையும் நிறுவியுள்ளனர்.
முதன்மை பூதநாதர் கோவிலுக்கு அருகாமையிலேயே மல்லிகார்ஜூனா குழு கோவில்கள் உள்ளன. இவை ஏரியின் வடக்கு பகுதியில் உள்ளன. தெற்கு வாசலைக் கொண்ட இந்த ஆலயம், பாம்சனா நாகர பாணியில் கட்டப்பட்டவை. இது ஒரு காலத்தில் மிகப்பெரிய விஷ்ணு வழிபாட்டிற்குரிய கோவிலாக இருந்திருக்கலாம் என்கிறார்கள்.
பின் வழிபாடு இல்லாமல் போன இந்த ஆலயத்தில், பின்வந்தவர்கள் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். கோவிலில் எட்டு தூண்களுடன் செவ்வக வடிவ மண்டபம் உள்ளது. இது உள் மண்டபம், அந்தரளம், கருவறை ஆகிய அமைப்புடன் காணப்படுகிறது. இந்த கோவில் சுவரில் விஷ்ணு, சிவன் ஆகிய இருவரும் இருக்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்