search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 30-ந்தேதி தொடங்குகிறது
    X

    பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 30-ந்தேதி தொடங்குகிறது

    • தீபத்திருவிழா 30-ந்தேதி தொடங்கி 7 நாட்கள் நடக்கிறது.
    • டிசம்பர் 6-ந்தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் சரவணப்பொய்கையில், 6 செந்தாமரை மலர்களில் 6 குழந்தையாய் தவழ்ந்தபோது கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார். இதனால் முருகப்பெருமானுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் உண்டு.

    முருகப்பெருமானின் அவதார சிறப்பை விளக்கும் வகையில், கார்த்திகை தீபத்திருவிழா அனைத்து முருகன் கோவில்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலிலும் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 30-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி 7 நாட்கள் நடக்கிறது. திருவிழாவில் முதல் 6 நாட்களும் சாயரட்சை பூஜைக்கு பின்னர் சண்முகர் அர்ச்சனை, தீபாராதனை, சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    மேலும் இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்கு பிறகு தங்கரத புறப்பாடும் நடைபெறுகிறது. திருவிழாவின் 6-ம் நாளான அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி யாகசாலையில் இருந்து பரணி தீபம் கொண்டு வரப்பட்டு மூலவர் சன்னதியில் ஏற்றப்படுகிறது.

    பின்னர் மறுநாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கார்த்திகை அன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, உடன் விஸ்வரூப தரிசனம், சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 4 மணிக்கு சாய ரட்சை பூஜையும் நடக்கிறது. அதன்பின்னர் சண்முகர் அர்ச்சனை, தீபாராதனையை தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதையடுத்து மலைக்கோவிலில் உள்ள நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றுதல், மாலை 6 மணிக்கு மேல் வெளிப்பிரகாரத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றுதல், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து உபகோவில்களான திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன், லட்சுமி நாராயணப்பெருமாள், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்து வரப்படுகிறது.

    Next Story
    ×