search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பரமநாயகி அம்பாள்-பசுபதீஸ்வரர், கங்காளேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 3-ந்தேதி நடக்கிறது
    X

    பரமநாயகி அம்பாள்-பசுபதீஸ்வரர், கங்காளேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 3-ந்தேதி நடக்கிறது

    • இக்கோவிலின் கும்பாபிஷேக விழா 14 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது.
    • பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் நடைபெற உள்ளது.

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தொண்டராம்பட்டு மேற்கு கிராமத்தில் பரமநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர், கங்காளேஸ்வரர் கோவில் உள்ளது.

    பழமை வாய்ந்த சோழர் காலத்து சிவலிங்கம் அமைய பெற்றுள்ள சிறப்பு வாய்ந்த சிவதலங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது. சிவபெருமான் தனது சிறுத்தொண்டர் எனும் சிவபக்தரின் அன்னதான மகிமையை சோதிக்கும் விதமாக, சிவனடியாராக தோன்றி பிள்ளைக்கறி சமைத்து கேட்டதாகவும், அதற்காக தனது ஒரே மகனையே சமைத்து அன்னமிட சிறுத்தொண்டர் முன் வந்ததையும், இதனைக் கண்ட சிவபெருமான் தன் பக்தரின் சிவத்தொண்டினை பாராட்டி, அவரது மகனையே உயிர்ப்பித்துக் கொடுத்ததாகவும் இக்கோவிலின் தல வரலாறு கூறுகிறது.

    இவ்வாறு சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் அமுதுபடையில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த அமுதுபடையலில் சுவாமி அன்னபிரசாதம் வாங்கி உண்டால், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இவ்வாறு சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் பரமநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர், கங்காளேஸ்வரர் மற்றும் விநாயகர், பாலமுருகன், தக்சாணமூர்த்தி, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், துர்க்கை, நவக்கிரகம் ஆகிய பரிவாரங்களோடு லிங்கோத்பவர், பைரவர் ஆகிய மூர்த்திகளும் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டு இக்கோவிலின் கும்பாபிஷேக விழா 14 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் நடைபெற இருக்கிறது.

    இதை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெறுகிறது. இதேபோல் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 5 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து 3-ந் தேதி காலை 5 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, திருநெல்வேலி மாவட்டம் செங்கோல் ஆதீனம், திருவாரூர் மாவட்டம் வேளாக்குறிச்சி ஆதினம், திண்டுக்கல் மாவட்டம் சிவபுர ஆதினம், தஞ்சை மாவட்டம் ஆம்பலாபட்டு சிவராஜ மகேந்திர சுவாமிகள் ஆகியோருடைய முன்னிலையில் காலை 8 மணிக்கு யாத்ராதானம் கடம் புறப்பட்டு காலை 8.45 மணிக்கு கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து காலை 8.55 மணிக்கு மூலவர் மற்றும் பரிவாரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானமும், இரவு திரைப்பட இசையமைப்பாளர் தேவா குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை தொண்டராம்பட்டு மேற்கு கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×