search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடக்கிறது
    X

    திருக்கைத்தல சேவை நடைபெற்றபோது எடுத்த படம்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடக்கிறது

    • 11-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
    • 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது.

    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 22-ந் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா 23-ந் தேதி தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான கடந்த 1-ந் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.2-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ராப்பத்து நாட்களில் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளி அரையர்கள் இசைக்கும் திருவாய்மொழி பாசுரங்களை கேட்டபடி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

    ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றது. இதையொட்டி மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு பரமபத வாசலை கடந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு மாலை 6 மணி முதல் 6.15 மணி வரை திருக்கைத்தல சேவை (நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில்) நடைபெற்றது.மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை உயபகாரர் மரியாதையுடன் பொது ஜன சேவையும் நடைபெற்றது. இரவு 11.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் நள்ளிரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான இன்று(திங்கட்கிழமை) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை வையாளி வகையறா கண்டருளுகிறார். பின்னர் மாலை 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைகிறார்.

    அங்கு இரவு 8.15 மணி முதல் இரவு 9.30 மணி வரை அரையர் சேவையுடன், பொது ஜன சேவையும் நடைபெறுகிறது. இரவு 11.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் நள்ளிரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 10-ம் திருநாளான வருகிற 11-ந் தேதி தீர்த்தவாரியும், 12-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடக்கிறது. இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

    Next Story
    ×