search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீரங்கம் கோவிலில் தெப்பத்திருவிழா: நம்பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதி உலா
    X

    நம்பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதி உலா வந்தபோது எடுத்த படம்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் தெப்பத்திருவிழா: நம்பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதி உலா

    • 1-ந்தேதி நம்பெருமாள் நெல்லளவு கண்டருள்கிறார்.
    • தெப்பத்திருவிழா 2-ந்தேதி நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழா வருகிற மார்ச் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. தெப்பத்திருவிழாவின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தோளுக்கினியான் பல்லக்கில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு ரெங்கவிலாஸ் மண்டபத்திற்கு காலை 8.15 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்தவாறு நம்பொருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பின்னர் மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் புறப்பட்டு உள்வீதிகளில் வலம் வந்து இரவு 7.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    தெப்பத்திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) ஹனுமந்த வாகனத்திலும், நாளை(சனிக்கிழமை) கற்பகவிருட்ச வாகனத்திலும், 26-ந் தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 27-ந்தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 28-ந் தேதி யானை வாகனத்திலும் உள்திருவீதிகளில் நம்பெருமாள் வலம் வருகிறார். தெப்பத்திருவிழாவின் 7-ம் நாளான 1-ந் தேதி மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்வீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் சேருகிறார்.

    முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8-ம் நாளான 2-ந் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

    9-ம் திருநாளான 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 2 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 7 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×