search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
    X

    நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

    • தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது.
    • இன்று (24-ந்தேதி) நள்ளிரவு தொடங்கி நாளை வரை பாதுகாப்பு பலமாக இருக்கும்.

    சென்னை :

    டிசம்பர் 25-ந்தேதி இயேசு கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி, டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். கிறிஸ்தவர்களின் இல்லங்களுக்கு பாடகர் குழுவினர் வந்து பாடல்களை பாடி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவிப்பார்கள்.

    இதுதவிர, தேவாலயங்களிலும், வீடுகளிலும் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு, விளக்குகளால் அலங்கரித்து வைத்திருப்பார்கள். இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 25-ந்தேதியன்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும்.

    அந்தவகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சாந்தோம், பெசன்ட்நகர் உள்பட தேவாலயங்களில் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவில் இருந்தே சிறப்பு ஆராதனையும், பாடகர் குழுவினரால் சிறப்பு பாடல்கள் பாடப்பட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    அதன்படி, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தூய ஜார்ஜ் கதீட்ரல் ஆலயத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு 11.30 மணிக்கு சிறப்பு ஆராதனையும், நாளை காலை 7.30 மற்றும் மாலை 6 மணிக்கு சிறப்பு பிரார்த்தனையும் நடக்க இருக்கிறது.

    சென்னை அடையாறு சி.எஸ்.ஐ. இயேசு அன்பர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நாளை காலை 4.30 மணி, 7 மணி, 8.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள அந்தோணியார் திருத்தலத்தில், இன்று நள்ளிரவு 12 மணிக்கும், நாளை காலை 8 மற்றும் 10 மணிக்கும் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.

    மேலும், சென்னையில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பை தீவிரப்படுத்தும்படி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். சென்னையிலும் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் சாந்தோம் தேவாலயம், பெசன்ட்நகர் வேளாங்கண்ணி தேவாலயம் உள்ளிட்ட 350 தேவாலயங்கள் உள்ள பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. இன்று (24-ந்தேதி) நள்ளிரவு தொடங்கி நாளை வரை பாதுகாப்பு பலமாக இருக்கும். போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

    Next Story
    ×