search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்று விநாயகரின் அவதார தினம்
    X

    இன்று விநாயகரின் அவதார தினம்

    • எல்லா செயல்களிலும் வெற்றியைஅளிப்பவர் விநாயகர் .
    • வீடுகளில் பிள்ளையார் அகவல், காப்பு, புராணம் போன்றவற்றைப் படித்து வரலாம்.

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

    நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்

    துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு

    சங்கத் தமிழ் மூன்றும் தா!

    ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் வருவது விநாயகர் சதுர்த்தி. இது விநாயகரின் அவதார தினம் வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி தினமாகும்.

    சிவனார் அபிஷேகப்பிரியர், திருமால் அலங்காரபிரியர், பிள்ளையாரோ நைவேத்தியப்பிரியர். எனவே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அவருக்கு பிடித்த அவல், பொரி, கடலை கொழுக்கட்டை, கரும்பு போன்ற நிவேதனப் பொருட்களை ஏழை-எளியோருக்கு தானம் செய்தால் நல்லது.

    விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையிலேயே எழுந்து, நற்சிந்தனையோடு நன்னீரில் குளித்துப் பூஜைக்கு வேண்டிய பொருள்களைச்சேகரிக்க வேண்டும். களிமண்ணில் செய்த பிள்ளையாரைப் பல்வேறு விதமான இலைகள், பூக்களில் (21 வகையான) அருகம் புல்லையும் இரண்டு இரண்டாகச் சேர்த்துப்பூஜிக்க எடுத்து வைத்து கொள்ளலாம்.

    வீடுகளில் பிள்ளையார் அகவல், காப்பு, புராணம் போன்றவற்றைப் படித்து வரலாம். பிள்ளையார் வழிபாடு என்ற அத்தியாயத்தில் கூறியுள்ள படி அவருக்கு உபச்சரங்களான ஆவாகனம், ஆசனம், ஸ்தாபனம், பாத பூஜை, நீர் அளித்தல், பால், தயிர், மோர் அளித்தல், பஞ்சாமிருதம், துணிகள், சந்தனம், குங்குமம், ஆபரணங்கள், மலர், அட்சதை, தூபம், தீபம், குடை, தாம்பூலம், சுற்றி வணங்குதல், தரையில் வீழ்ந்து வணங்குதல், சாமரம் வீசுதல், போன்ற சேவைகளைச் செய்தல் வேண்டும்.

    வீட்டில் இது போல் நம்மால் செய்ய முடியாதவர்கள் கோவில் சென்று சிறப்பாக சேவை செய்தல், பாடல் கேட்டல், காப்பு, அகவல், படிப்பதும் நல்ல பயன் தரும். பூஜையில் வைத்த பிள்ளையார் பிம்பத்தை அடுத்த நாளோ ஓரிருநாட்களிலோ ஆற்றிலோ கடலிலோ கரைத்தல் வேண்டும். அவ்வையார் விநாயகருக்கு பாலும், தெளிதெனும் பாகும், பருப்பும் கொடுத்தார்.

    அருணகிரிநாதர் விநாயகப் பெருமானுக்கு உகந்த தாக கனியு-ம், அப்பம், அவல், பொரி, அமுது, இளநீர், எள்ளுருண்டை, வெள்ளரி, விளாம்பழம், நாவற்பழம் போன்ற பல பொருள்களைத் திருப்புகழில் குறிப்பிடுகின்றார். 'வி' என்றால் "இதற்கு மேல் இல்லை" எனப்பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப்பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்ற பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.

    விநாயகருக்கு அர்ச்சிக்கும் போது, "ஓம் அநீஸ்வராய நம" என்பர். "அநீஸ்வராய" என்றால் தனக்கு மேல் ஒரு ஈஸ்வரனே இல்லை என்று பொருள். கணபதி எனும் சொல்லில் 'க' என்பது ஞானத்தைக் குறிக்கிறது. 'ண' என்பது ஜீவர்களின் மோட்சத்தைக் குறிக்கிறது. 'பதி' என்னும் பதம் தலைவன் எனப் பொருள்படுகிறது. பரப்பிரும்ம சொரூபமாயிருப்பவன் கணபதி. மோட்சத்திற்கும் அவனே தலைவன்.

    தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியைஅளிப்பவர் விநாயகர் . நல்ல அறிவையும் புகட்டுபவர். மாணவர்களால் மனம் உருக வணங்கப்படுபவர். நாம் தொடங்கும் ஒவ்வொரு செயலுக்கும் இவருக்கே முதல் வழிபாடு செய்ய வேண்டும் என்ற மரபு பல காலமாக உள்ளது. எதனை எழுதுவதற்கு முன்பும் இவரை நினைத்து பிள்ளையார் சுழி போட்டு தான் எழுத தொடங்குவார்கள். சாலை ஓரங்களில், இரண்டு சாலைகள் கூடும் இடங்களில் கணபதி சிலை வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. இந்து கடவுளர்களில் மிகவும் பிரசித்தமான கடவுளாக விளங்குபவர் கணபதியே.

    பஞ்சாயதன பூஜையில் அதாவது சிவன் அம்பாள், விஷ்ணு, சூரியன், விநாயகர் என்பதில்முதலில் வருபவர் கணபதி. கணபதியினை வணங்கும் மதத்திற்கு காணாபத்யம் என்று பெயர். இதனை பின்பற்றுபவர்கள் கணபதியை உலகினை படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்பவராகவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்று வடிவங்களிலும் இவர் விளங்குபவராகவும் கருதுகின்றனர்.

    பிரம்மவைவர்த்த புராணத்தில் கணபதியே தான் ஸ்ரீகிருஷ்ணன் என்று சொல்லப்படுகிறது. எனவேஇவர் வைணவர்களாலும் வணங்கப்படுகிறார். விநாயகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யும் போது அருகம்புல்லும், வன்னி இலைகளும், மந்தாரைப் பூவும் அவசியம் இருக்க வேண்டும்.

    அப்பம், அவல், அமுது, அவரை, இளநீர், எள்ளுருண்டை, கரும்பு, கல்கண்டு, வள்ளிக்கிழக்கு, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், மிளகு சாதம், தேன், தினைமாவு, நெய், பச்சரிசி, பால்,பாகு வெல்லம், பணியாரம், கொழுக்கட்டை, பிட்டு, லட்டு, வடை, வெண்ணெய், விளாம்பழம், நாவல் பழம், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.

    விநாயகருக்கு அபிஷேகம் செய்ய சந்தனாதித் தைலம், மாப்பொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி, ரசபஞ்சாமிர்தம்,பழப்பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், கருப்பஞசாறு, இளநீர், சந்தனம், பழ ரசங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். விநாயகப் பெருமானுக்குரிய அபிஷேகப் பொருட்களை வாங்கித் தந்து, தரிசனம் செய்து வணங்குவதன் மூலம் சகல நலன்களையும் பெறலாம்.

    Next Story
    ×