search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை சட்டசபையிலிருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
    X

    புதுவை சட்டசபையிலிருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு

    புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து வெளிநடப்பு செய்தனர். #PuducherryAssembly #ADMK
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது.

    கூட்டம் தொடங்கியவுடன் சபாநாயகர் வைத்திலிங்கம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிக்கை நகல்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி சபையில் தாக்கல் செய்தார்.

    அப்போது அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் குறுக்கிட்டு பேசினார்.

    அவர் பேசும் போது, மக்கள் நல திட்டங்கள் எதையும் இந்த அரசு செயல்படுத்தவில்லை. ஆட்சியமைத்து 24 மாதங்களில் 6 மாதம் மட்டுமே அரிசி போடப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் புதிதாக 10 ஆயிரம் முதியோருக்கு பென்‌ஷன் தரப்படும் என அறிவித்தனர். 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்தும் ஒருவருக்குகூட புதிதாக பென்‌ஷன் தரப்படவில்லை. ஏ.டி.எம். கொள்ளையில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சட்ட ஒழுங்கு கெட்டுப் போயுள்ளது.

    நேற்றைய தினம்கூட முத்தியால்பேட்டையில் ரூ.1 கோடி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என தொடர்ந்து பேசினார். ஆனால் அவரை தொடர்ந்து பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதற்கிடையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்.கள் பாஸ்கர், அசனா, வையாபுரி மணிகண்டன் ஆகியோர் எழுந்து பேனர்களை தூக்கி காட்டினர். அந்த பேனரில் இலவச அரிசி எங்கே? முதியோர் பென்‌ஷன் எங்கே? ஏமாற்றாதே, ஏமாற்றாதே, மக்களை ஏமாற்றாதே என எழுதப்பட்டிருந்தது.

    பின்னர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் சபாநாயகர் இருக்கை நோக்கி சென்றனர். அவர்களை சபை காவலர்கள் தடுத்தனர். அப்போது சபாநாயகரிடம் பேனர்களை தூக்கிப்பிடித்து காட்டினர். பின்னர் சபா நாயகர் இருக்கை முன்பு சென்று தரையில் அமர்ந்து தர்ணா செய்ய முயன்றனர். ஆனால் அவர்களை சபை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

    அப்போது உறுப்பினர் அன்பழகன், சட்டமன்றத்தை கண் துடைப்பு நாடகமாக நடத்துகின்றனர். மருத்துவக் கல்லூரியில் அரசுக்கான இடங்களை பெறவில்லை. சட்ட ஒழுங்கு சீரழிந்துள்ளது. செயல்படாத மக்கள் விரோத அரசாக உள்ளது. இதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக்கூறி வெளியேறினார். அவருடன் மற்ற 3 எம்.எல்.ஏ.க்களும் வெளியேறினர். #PuducherryAssembly #ADMK
    Next Story
    ×