search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாணாவரம் அருகே விவசாயி மதுபாட்டிலால் குத்திக்கொலை
    X

    பாணாவரம் அருகே விவசாயி மதுபாட்டிலால் குத்திக்கொலை

    பாணாவரம் அருகே விவசாயி மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
    பனப்பாக்கம்:

    பாணாவரம் அருகே உள்ள மேலேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜிரெட்டி (வயது 49), விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் காட்டுப்பாக்கம் கிராம பகுதியில் உள்ளது. இவர் தனது நிலம் அருகே இருந்த கடையை டாஸ்மாக் கடைக்கு வாடகை விட்டுள்ளார். ராஜிரெட்டி தினமும் இரவு நேரத்தில் நிலத்திற்கு காவல் செல்வது வழக்கம்.

    இதேபோல், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு காவலுக்கு சென்றார். அப்போது அவர் டாஸ்மாக் கடை அருகே உள்ள திண்ணையில் படுத்திருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் ராஜிரெட்டியின் அண்ணன் மனோகரன் (58) நிலத்திற்கு வந்துள்ளார். அப்போது மதுபாட்டிலால் குத்திய நிலையில் ராஜிரெட்டி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர், பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது ராஜிரெட்டியை கொலை செய்த மர்மநபர்கள் மதுபாட்டிலை உடைத்து அவரது மார்பு பகுதியில் குத்தி இருப்பது தெரியவந்தது. அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எனவும், இந்த சம்பவம் முன்விரோதத்தில் நடந்ததா? எனவும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனையடுத்து போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வேலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் ‘கவ்வி’ பிடிக்கவில்லை.

    மேலும் தடயவியல் நிபுணர் விஜயன் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து கொலை நடந்த இடத்தில் தடயங்கள், கைரேகைகளை சேகரித்தனர்.

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில், கொலையாளிகளை விரைந்து பிடிக்க அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் மேற்பார்வையில், பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சக்தியலிங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்தின் அருகே இருந்த சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலத்தில் காவலுக்கு படுத்திருந்த விவசாயி கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    Next Story
    ×