search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணியிடம் ரூ.4 லட்சம் திருட்டு - மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
    X

    எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணியிடம் ரூ.4 லட்சம் திருட்டு - மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

    மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணியிடம் ரூ.4 லட்சத்தை திருடிச்சென்ற மர்மநபரை ரெயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    திருச்சி:

    கரூர் மாவட்டம், அரவக் குறிச்சி அருகே மாதிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீரங்கராயன் (வயது60). விவசாயியான இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருவதாக கூறப்படுகிறது. சீரங்கராயன் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கரூருக்கு குளிர்சாதன வசதியான பி.2 பெட்டியில் பயணம் செய்தார்.

    அந்த ரெயில், நேற்று அதிகாலை 5 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் 2-வது நடைமேடைக்கு வந்தது. அப்போது சீரங்கராயன் எழுந்து கழிவறைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது அவர் இருந்த இருக்கையில் வைத்திருந்த சூட்கேசை காணாது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த சூட்கேசில் ரூ.4 லட்சம் மற்றும் 2 ஏ.டி.எம்.கார்டுகள், பான் கார்டு ஆகியவை இருந்தன. மர்மநபர் யாரோ சூட்கேசை திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜங்ஷன் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சீரங்கராயன் புகார் அளித்தார். அதன்பேரில், ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, சீரங்கராயனின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில் அவரது வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம். மூலம் ரூ.10 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஏ.டி.எம். கார்டு வைத்திருந்த அட்டையில் அதன் பின் பகுதியில் ரகசிய குறியீடு எண்ணையும் அவர் எழுதி வைத்திருந்துள்ளார். இதனால் அந்த கார்டு மூலம் மர்மநபர் ரூ.10 ஆயிரத்தை எடுத்திருக்கிறார்.

    சீரங்கராயன் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை வைத்து எந்த ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கப்பட்டது என்பதையும், அந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபரின் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் ரெயிலில் பயணியிடம் ரூ.4 லட்சம் திருட்டு சம்பவம் தொடர்பாக ஜங்ஷன் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இது குறித்து ரெயில்வே போலீசார் கூறுகையில், “சீரங்கராயன் சென்னையில் அவரது நண்பர் ஒருவரிடம் ரூ.4 லட்சம் கடனாக வாங்கி வந்ததாக தெரிவித்திருக்கிறார். அவர் பணம் கொண்டு வருவதை கவனித்த மர்மநபர் அதே ரெயிலில் பயணம் செய்து வந்தாரா? அல்லது அதே பெட்டியில் அவருடன் பயணம் செய்து வந்த நபர் கைவரிசையை காட்டினாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். மேலும் அந்த பெட்டியில் பணியில் இருந்த ரெயில்வே ஊழியர் ஒருவரையும் பிடித்து விசாரிக்கப்படு கிறது” என்றனர். 
    Next Story
    ×