search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் தடுப்பு சுவரில் லாரி மோதி கவிழ்ந்தது - போக்குவரத்து பாதிப்பு
    X

    கடலூரில் தடுப்பு சுவரில் லாரி மோதி கவிழ்ந்தது - போக்குவரத்து பாதிப்பு

    நடுரோட்டில் லாரி கவிழ்ந்து கிடந்ததால் கடலூர்-சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் சக்தி(வயது 45). லாரி டிரைவர். இவர் நேற்று நள்ளிரவு நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில் இருந்து லாரியில் பிளாஸ்டிக் டேங்குகளை ஏற்றி கொண்டு புதுவைக்கு வந்து கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை 4 மணியளவில் அந்த லாரி கடலூர்-சிதம்பரம் சாலை கோ-ஆப்-டெக்ஸ் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவர் மீது மோதி சாலையில் பலத்த சத்தத்துடன் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியை ஓட்டிவந்த டிரைவர் சக்தி அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    நடுரோட்டில் லாரி கவிழ்ந்து கிடந்ததால் கடலூர்-சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

    பின்னர் சாலையில் கவிழ்ந்து கிடந்த அந்த லாரியை கிரேன் மூலம் அகற்றினர். இந்த விபத்து காரணமாக சுமார் 3 மணி நேரம் கடலூர்- சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. லாரியை அகற்றிய பின்பு போக்குவரத்து மீண்டும் சீரானது.

    இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×