search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரியில் தடுப்பணை கட்ட ரூ.292 கோடி எடப்பாடி பழனிசாமி அறிவித்தது பழைய திட்டம் - ராமதாஸ் குற்றச்சாட்டு
    X

    காவிரியில் தடுப்பணை கட்ட ரூ.292 கோடி எடப்பாடி பழனிசாமி அறிவித்தது பழைய திட்டம் - ராமதாஸ் குற்றச்சாட்டு

    காவிரியில் தடுப்பணை கட்ட ரூ.292 கோடி எடப்பாடி பழனிசாமி அறிவித்தது பழைய திட்டம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #Cauvery

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட நீர், பாசனக் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததாலும், தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டப் படாததாலும், வீணாக கடலில் கலந்திருக்கிறது. இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முன் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் கூற முடியாமல் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இப்போது அறிவித்துள்ள 62 தடுப்பணைகளைக் கட்டும் திட்டம் புதிதல்ல. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருந்த திட்டத்தை தான் புதிய திட்டமாக அறிவித்து மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முயல்கிறார் என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறேன்.

    இந்த தடுப்பணைத் திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்திலேயே செயல் படுத்தப்பட்டிருந்தால் காவிரி பாசன மாவட்டங்களின் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றிருக்கும். வீணாக கடலில் கலந்த நீரை முழுமையாக தடுத்திருக்க முடியாது என்றாலும், அதிகபட்சமாக 30 டி.எம்.சி நீரை தேக்கி வைத்திருக்க முடியும்.

    அதுமட்டுமின்றி, பாசனக் கால்வாய்கள் மூலம் மேலும் 30 டி.எம்.சி தண்ணீரை காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சேமித்து வைத்திருக்க முடியும்.


    தமிழக அரசின் அலட்சியம் காரணமாக சுமார் 60 டி.எம்.சி தண்ணீர் வீணாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி, 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.117 கோடி செலவில் நிறைவேற்றி முடிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்தத் திட்டத்தின் மதிப்பு இருமடங்காக, அதாவது ரூ. 292 கோடியாக அதிகரித்திருக்கிறது. குறித்த காலத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தத் தவறியதற்காக மக்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இதற்கெல்லாம் மேலாக இது மிகவும் சாதாரணத் திட்டம். கல்லணைக்கு கீழே ஓடும் காவிரி ஆற்றிலும் அதன் சிறிய கிளை ஆறுகளிலும் மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். இந்த தடுப்பணைகள் ஒவ்வொன்றிலும் அதிக பட்சமாக அரை டி.எம்.சி தண்ணீரை மட்டுமே சேமித்து வைக்க முடியும். இது போதுமானதல்ல.

    கொள்ளிடம் ஆற்றிலும், முக்கொம்புக்கு முன்னால் உள்ள அகண்ட காவிரியிலும் குறைந்தது 5 டி.எம்.சி கொள்ளளவுள்ள தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். இதற்குத் தனியாகத் திட்டம் வகுத்து செயல்படுத்தினால் தான் காவிரி பாசன மாவட்டங்களை வளமானதாக மாற்ற முடியும்.

    எனவே, இனியும் தாமதிக்காமல் காவிரி மற்றும் கிளை ஆறுகளில் 62 தடுப்பணைகளை கட்டும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, பெரிய அளவிலான தடுப்பணைகளைக் கட்டுவதற்கான திட்டத்தையும் விரைவாக வகுத்து செயல்படுத்த வேண்டும்.

    காவிரி மற்றும் அதன் துணை ஆறுகள், பாசனக் கால்வாய்கள், அவற்றுடன் இணைக்கப்பட்ட ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளையும் தூர்வாரி பராமரிப்பதற்கான திட்டத்தையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×